கேரள மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நிறைவடையும் நிலையில், திடீரென நடிகை அஞ்சலி நாயர் அரசியல் களத்தில் குதித்திருப்பதால் கேரள அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
எர்ணாகுளம் மாவட்டத்தின் திருப்பூணித்துறை தொகுதியில், பாஜக தலைமையிலான என்.டி.ஏ கூட்டணியில் உள்ள ‘ட்வெண்டி 20’ கட்சி சார்பில் பிரபல சினிமா நடிகை அஞ்சலி நாயர் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். பாஜகவிற்கு அதிக செல்வாக்குள்ள இந்த தொகுதியைத் தோழமை கட்சிக்கு விட்டுக்கொடுத்தது அக்கட்சியினரிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தாலும், தற்போது நிர்வாகிகள் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
தனது அரசியல் பிரவேசம் குறித்துப் பேசிய அஞ்சலி நாயர், தான் ஒரு சினிமா பிரபலம் என்பதை தாண்டி, சாதாரண மக்களில் ஒருவராகவே வாழ விரும்புவதாக தெரிவித்தார். கடந்த 18 ஆண்டுகளாக திரையுலகில் இருந்தாலும், அன்றாட தேவைகளுக்காக சந்தைகளுக்கும் கடைகளுக்கும் ஒரு சாமானிய பெண்ணாகவே சென்று வருவதாகவும், தன்னை திருப்பூணித்துறையின் மகளாக மக்கள் கருத வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
இந்த தேர்தல் வாய்ப்பை இறைவனின் ஆசியாக கருதுவதாகக் குறிப்பிட்ட அவர், தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இவரின் வருகை இத்தொகுதியில் மும்முனை போட்டியை உறுதிப்படுத்தியுள்ளது.

