கொச்சியில் நடைபெறவுள்ள ஆசிய கோப்பை தகுதி சுற்றுப் போட்டிக்கு முன்னதாக, இந்திய கால்பந்து அணியின் தலைமை பயிற்சியாளர் காலித் ஜமீல் மற்றும் வீரர்கள் மைதானத்திற்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜவஹர்லால் நேரு சர்வதேச மைதானத்தின் வாடகை பாக்கி மற்றும் பாதுகாப்பு வைப்புத்தொகை தொடர்பான சர்ச்சையாலேயே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு கொச்சிக்கு திரும்பிய இந்திய அணிக்கு நேர்ந்த இந்த அவமரியாதை, இந்திய கால்பந்து நிர்வாகத்தின் குளறுபடிகளை வெளிச்சம் போட்டு காட்டியுள்ளது.
சுமார் 20 முதல் 25 லட்சம் ரூபாய் வைப்புத்தொகை மற்றும் வாடகையை ஜிசிடிஏ நிர்வாகம் கோரிய நிலையில், கேரள கால்பந்து சங்கம் கால அவகாசம் கேட்டதால் மைதானத்தின் வாயில்கள் மூடப்பட்டன. இதனால் திட்டமிடப்பட்ட செய்தியாளர் சந்திப்பு மற்றும் பயிற்சி ரத்து செய்யப்பட்டது.
இது ஒரு சிறிய தொழில்நுட்ப கோளாறு என்றும், மார்ச் 31 அன்று ஹாங்காங் அணிக்கு எதிரான போட்டி திட்டமிட்டபடி நடக்கும் என்றும் கேஎஃப்ஏ தலைவர் நவாஸ் மீரான் உறுதியளித்துள்ளார். இருப்பினும், இது போன்ற தொடர்ச்சியான நிர்வாக தவறுகள் வீரர்களின் மனநிலையை பாதிப்பதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

