ஐபிஎல் 2026 சீசனின் தொடக்க ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன. இப்போட்டி குறித்து இந்திய நட்சத்திர வீரர் ரவிச்சந்திரன் அஸ்வின் தனது யூடியூப் சேனலில் சுவாரஸ்யமான கணிப்புகளை பகிர்ந்துள்ளார்.
இந்த சீசனில் ஏதேனும் ஒரு அணி 300 ரன்கள் என்ற இமாலய இலக்கை எட்ட வாய்ப்புள்ளதாக அவர் அதிரடியாக தெரிவித்துள்ளார்.
இரு அணிகளிலும் பேட்டிங் வரிசை வலுவாக இருப்பதையும், அதேசமயம் பந்துவீச்சு சற்று பலவீனமாக இருப்பதையும் சுட்டிக்காட்டிய அஸ்வின், பிட்ச் சாதகமாக இருந்தால் ‘மிஷன் 300’ நிச்சயம் சாத்தியம் என்றார்.
குறிப்பாக, ஆர்சிபி அணியில் ஜோஷ் ஹேசில்வுட் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் பேட் கம்மின்ஸ் இல்லாதது இரு அணிகளுக்கும் மிகப்பெரிய இழப்பு. ஹேசில்வுட் போன்ற அனுபவமிக்க பந்துவீச்சாளர் இல்லாதது பெங்களூரு அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தும் என்றும், இது ரன் குவிப்பிற்கு வழிவகுக்கும் என்றும் அவர் கணித்துள்ளார்.
இந்த சீசனின் முதல் போட்டியே ரசிகர்களுக்கு ஒரு பெரிய ரன் விருந்தாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

