தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சி துவங்கியது முதலே திமுகவை மட்டுமே விமர்சனம் செய்து வருகிறார். அதுவும் கரூர் சம்பவத்திற்கு பின் திமுகவை தீய சக்தி என சொல்ல துவங்கி விட்டார் விஜய். தன்னை அரசியலில் வளர விடாமல் மக்களை சந்திக்க விடாமல், தனது பொதுக்கூட்டங்களுக்கு அனுமதி கொடுக்காமல் திமுக தடுக்கிறது என விஜய் குற்றம் சாட்டி வருகிறார்.
நேற்று பெரம்பூரில் பிரச்சாரத்தில் பேசிய போது கூட திமுக எனும் தீய சக்தியில் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை.. மக்கள் நிம்மதியாக இல்லை.. திமுக ஆட்சியை விரட்ட வேண்டும் என்றெல்லாம் பேசியிருந்தார்.
ஒருபக்கம், விஜய் அதிமுகவுடன் கூட்டணி வைக்காத காரணத்தால் திமுகவின் எதிர்ப்பு ஓட்டுக்கள் அதிமுகவுக்கு செல்வது குறையும், ஏனெனில், குறிப்பிட்ட சதவீத வாக்குகள் விஜய்க்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது திமுகவுக்கு சாதகமாகவே அமையும் என சிலர் சொல்கிறார்கள்.
இந்நிலையில் அதிமுக பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ‘விஜய் புதிதாக கட்சி ஆரம்பித்து அரசியலுக்கு வந்திருக்கிறார்.. தேர்தல் தேதி அறிவித்து 10 நாளாக விஜய் வெளியே வரவில்லை.. தற்போது மீண்டும் வந்திருக்கிறார்.. மக்கள் அவரை பொருட்டாகவே எடுத்துக் கொள்ளவில்லை.. திடீர்னு வராரு.. திமுகவை விமர்சனம் பண்ணிட்டு போறாரு.. திமுகவ திட்டுவதன் மூலம் எதிர்ப்பு ஓட்டுகளை குறிவைத்து திமுகக்கு ஆதரவாக விஜய் செயல்படுகிறார்.. ஆனால் நம் விடக்கூடாது.. ஒரு ஓட்டு கூட மற்றவர்களுக்கு போய்விடக்கூடாது.. திமுக எதிர்ப்பு ஓட்டுக்களை நாம்தான் வாங்க வேண்டும்’ என அவர் பேசியிருக்கிறார்.

