நவீன காலத்தின் அதீத வசதிகளான பிளிங்கிட் மற்றும் இன்ஸ்டாமார்ட் போன்ற செயலிகளை ஒரு மாதம் பயன்படுத்தாமல் தவிர்த்ததன் மூலம், எனது பணம் மற்றும் ஆரோக்கியத்தில் ஏற்பட்ட ஆச்சரியமான மாற்றங்களை நான் உணர்ந்தேன். இந்த செயலிகள் வெறும் 10 நிமிடங்களில் பொருட்களை கொண்டு வந்து சேர்த்தாலும், அவை நம்மை தேவையில்லாத பொருட்களை வாங்க தூண்டுகின்றன என்று இளம்பெண் ஒருவர் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
குறைந்தபட்ச ஆர்டர் தொகையை எட்டுவதற்காக, தேவையில்லாத நொறுக்கு தீனிகளையும், சாக்லேட்டுகளையும் நாம் கூடையில் சேர்க்கிறோம். இதனால் ஒரு மாதத்தில் சுமார் ரூ.4,000 முதல் ரூ.5,500 வரை கூடுதல் செலவு ஏற்படுவதை நான் கண்டறிந்தேன். இந்த செயலிகளை நீக்கிய பிறகு, அருகிலுள்ள மளிகை கடைக்கு நேரடியாக சென்று தேவையான பொருட்களை மட்டும் வாங்கும் பழக்கம் ஏற்பட்டது.
இது பணத்தை சேமிப்பதோடு மட்டுமல்லாமல், நடைப்பயிற்சி மற்றும் உடல் இயக்கத்தையும் அதிகரித்தது. நள்ளிரவு நேரங்களில் தேவையற்ற உணவுகளை ஆர்டர் செய்யும் பழக்கம் குறைந்து, ஆரோக்கியமான உணவு முறைக்கு திரும்ப முடிந்தது.
காய்கறிகளை நாமே நேரில் பார்த்து தேர்ந்தெடுப்பது ஒரு மனநிறைவை தருகிறது. அதீத வசதிகள் நம்மிடமிருந்து பறிக்கும் சிறிய சுறுசுறுப்பையும், பணத்தையும் மீட்டெடுக்க இந்த ஒரு மாத இடைவெளி எனக்கு பெரிதும் உதவியது. இவ்வாறு அந்த பெண் கூறியுள்ளார். அவரது பதிவிற்கு வரவேற்பு அதிகரித்து வருகிறது.

