ஐபிஎல் 2026 தொடரில் நேற்று நடைபெற்ற விறுவிறுப்பான ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக டெல்லி கேபிடல்ஸ் அணி வெறும் ஒரு ரன் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற இந்த போட்டியில், 211 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி துரத்திய டெல்லி அணி 209 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
டெல்லி அணியின் கேஎல் ராகுல் அபாரமாக விளையாடி 92 ரன்கள் குவித்த போதிலும், அவர் முக்கியமான நேரத்தில் ஆட்டமிழந்தார். அதன் பிறகு காயம் காரணமாக வெளியேறி மீண்டும் களமிறங்கிய டேவிட் மில்லர், அதிரடியாக விளையாடி 20 பந்துகளில் 41 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில் 13 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், மில்லர் ஒரு சிக்ஸர் விளாசி நம்பிக்கையூட்டினார். ஆனால், கடைசி பந்தில் ரன் எடுக்க தவறியதால் டெல்லி அணி நூலிழையில் வெற்றியை நழுவவிட்டது.
தோல்வி குறித்துப் பேசிய டெல்லி கேப்டன் அக்ஷர் படேல், “நாங்கள் இன்னும் புத்திசாலித்தனமாக விளையாடியிருக்க வேண்டும். முக்கியமான இடைவெளிகளில் விக்கெட்டுகளை இழந்தது பின்னடைவை ஏற்படுத்தியது. இல்லையெனில் இந்த இலக்கை எளிதாகவே எட்டியிருக்கலாம்,” என்று தெரிவித்தார். ராகுலின் இன்னிங்ஸ் சிறப்பாக இருந்ததாகவும், அடுத்த போட்டியில் தவறுகளை சரிசெய்து வெற்றி பாதைக்கு திரும்புவோம் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

