ஹார்முஸ் நீரிணைப் பகுதியில் பயணம் செய்த இந்திய கப்பல்கள் மீது ஈரான் கடற்படை துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படும் சம்பவம் உலகளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான ஒரு ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த ஆடியோவில், Sanmar Herald என்ற இந்திய எண்ணெய் கப்பலின் அதிகாரி, Sepah கடற்படையே, நீங்கள் தான் அனுமதி கொடுத்தீர்கள். இப்போது எங்களை நோக்கி சுடுகிறீர்கள். எங்களை திரும்பி செல்ல விடுங்கள்” என்று பதற்றத்துடன் வேண்டுகோள் விடுப்பது பதிவாகியுள்ளது. சனிக்கிழமையன்று இந்த பகுதியில் பயணம் செய்த நான்கு இந்தியக் கப்பல்களில் இரண்டு தாக்குதலுக்கு உள்ளானதால், அவை உடனடியாக தங்கள் பயண பாதையை மாற்றிக்கொண்டு பின்வாங்கின.
ஹார்முஸ் நீரிணைப் பகுதி திறந்திருப்பதாக முதலில் அறிவித்த ஈரான், பின்னர் அமெரிக்காவின் பொருளாதார தடையைக் காரணம் காட்டி அந்த பாதையை மூடியது. இந்தத் திடீர் மாற்றமே தாக்குதலுக்குக் காரணமாக கருதப்படுகிறது.
இச்சம்பவத்தை தொடர்ந்து, டெல்லியில் உள்ள ஈரான் தூதர் முகமது ஃபதாலியை இந்திய வெளியுறவு அமைச்சகம் நேரில் அழைத்து தனது கடும் கண்டனத்தை பதிவு செய்தது. இந்திய கப்பல்களின் பாதுகாப்பு மற்றும் சர்வதேசக் கடல்சார் விதிகளின் முக்கியத்துவத்தை வெளியுறவு செயலாளர் இந்தச் சந்திப்பின் போது வலியுறுத்தினார்.

