மேற்கு வங்க சட்டமன்த் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி மாபெரும் வெற்றி பெற்று மம்தா பானர்ஜியின் 15 ஆண்டுகால திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. இந்த வெற்றி குறித்து பாஜக மூத்த தலைவர் சுவேந்து அதிகாரி கூறியதாவது:
தற்போதைய அரசின் தவறான செயல்பாடுகளுக்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளதாகவும், குறிப்பாக இந்துக்கள் மற்றும் பழங்குடியின மக்கள் பாஜகவிற்குப் பேராதரவு அளித்துள்ளதாகவும் தெரிவித்தார். அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் தேர்தலை சந்தித்ததாகவும், பாஜகவின் கூட்டு தலைமை இது குறித்து முடிவு செய்யும் என்றும் அவர் பதிலளித்தார்.
மறுபுறம், இந்த முடிவுகளை நிராகரித்துள்ள மம்தா பானர்ஜி, தேர்தல் ஆணையம் மற்றும் மத்திய படைகளின் உதவியுடன் பாஜக வாக்குகளை திருடியுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளார்.
தேர்தலுக்கு முன்பே 89 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டதாகவும், பல இடங்களில் வாக்கு எண்ணிக்கை வேண்டுமென்றே நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் புகார் தெரிவித்துள்ளார். தோல்வியைக் கண்டு அஞ்சாமல் தனது கட்சியினர் ‘புலிக்குட்டிகளை போல’ தொடர்ந்து போராடுவார்கள் என்றும் மம்தா சூளுரைத்துள்ளார்.

