1965ம் வருடம் முதல் சினிமா துறையில் இருந்து வந்தவர் கே.ராஜன். தயாரிப்பாளர், இயக்குனர், வினியோகஸ்தர், நடிகர் என சினிமாவில் பயணித்தார். சின்ன பட்ஜெட் படங்களுக்கு ஆதரவாக தொடர்ந்து குரல் கொடுத்து வந்தார். வினியோகஸ்தர் சங்க தலைவராகவும் இருந்தார்.
சின்ன படங்கள் தொடர்பான விழாக்களிலும் கலந்துகொண்டு நடப்பு சினிமா பற்றியும், சின்ன பட்ஜெட் படங்களில் தயாரிப்பாளர் சந்திக்கும் பிரச்சனைகள் பற்றியும் தொடர்ந்து பேசிவந்தார். பல யுடியூப் சேனல்களிலும் பேட்டி கொடுத்திருக்கிறார். அப்போதே தன்னிடம் கடனாக பணம் வாங்கிய பலரும் அதை திருப்பிக்கொடுக்கவில்லை என சொல்லிவந்தார்.
இந்நிலையில்தான், நேற்று சென்னை அடையாறு ஆற்றில் குதித்து கே.ராஜன் தற்கொலை செய்து கொண்டார். அவரின் மரணம் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஒருபக்கம் கடன் பிரச்சனை காரணமாக அவர் தற்கொலை செய்துகொண்டதாக ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டன.
இந்நிலையில், செய்தியாளர்களை சந்தித்த கே.ராஜனின் மகன், மகள் இருவரும் ‘எங்களுடைய அப்பா பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம். அவர் யாரிடமும் ஒரு பைசா கடன் வாங்கவில்லை; அவரின் பணம்தான் 20 கோடி வெளியே இருக்கிறது. சில சின்ன மற்றும் பெரிய தயாரிப்பாளர்கள் அவரிடம் கடன் வாங்கியுள்ளனர். யாரும் பணத்தை திருப்பி தரவில்லை.
என் அப்பா போன் செய்தாலும் அவர்கள் எடுப்பதில்லை. இதனால், கடந்த 2 வருடங்களாக அவர் மன உளைச்சலில் இருந்தார். 3 முறை ஹார்ட் அட்டாக் வந்தது. யாரெல்லாம் அவருக்கு பணம் கொடுக்கவேண்டும் என்கிற விபரத்தை தயாரிப்பாளர் சங்கத்தில் கொடுத்துள்ளோம். அந்த பணத்தை வாங்கி கொடுத்தால் எங்களுக்கு உதவியாக இருக்கும்’ என அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

