பாலிவுட் திரையுலகில் மூன்று தசாப்தங்களைக் கடந்தும், இன்றும் வசூல் மன்னனாகத் திகழ்ந்து வருபவர் நடிகர் சல்மான் கான். 60 வயதை நெருங்கினாலும் தனது உடலமைப்பைப் பேணி காப்பதிலும், பிளாக்பஸ்டர் படங்களைக் கொடுப்பதிலும் இளைய தலைமுறை நடிகர்களுக்கு சவால் விட்டு வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் அவர் தொடர்பான ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
மும்பையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு வழக்கமான பரிசோதனைக்காக சல்மான் கான் சென்றிருந்தார். அவர் மருத்துவமனையை விட்டு வெளியே வந்தபோது, அங்கிருந்த புகைப்படக் கலைஞர்கள் அவரைச் சூழ்ந்துகொண்டு முண்டியடித்தனர். சத்தமிட்டும், கேமரா ஒளியைப் பாய்ச்சியும் அவர்கள் செய்த அத்துமீறல் சல்மானை கடும் கோபத்திற்கு உள்ளாக்கியது.
மீடியாக்களின் பொறுப்பற்ற செயலைக் கண்டு கோபமடைந்த சல்மான் கான், அவர்களை நோக்கி,
எந்த இடத்தில் எப்படி நடந்துகொள்ள வேண்டும் என்ற அடிப்படை நாகரிகம் கூட உங்களுக்குத் தெரியாதா? எனக்கு 60 வயதாகிவிட்டது என்பதால் நான் பலவீனமாகிவிட்டேன் என்று நினைக்காதீர்கள். இப்போதும் என்னால் வலுவாகச் சண்டையிட முடியும், அதை மறந்துவிடாதீர்கள்.
என்று நேரடியாகவே கூறினார்.

