தமிழக அரசியலில் பெரும் எதிர்பார்ப்புகளை தூண்டிய நிகழ்வாக, தமிழக வெற்றி கழக தலைவர் மற்றும் முதல்வர் விஜயின் பதவியேற்பு விழாவில் மு.க. அழகிரியின் மகள் கயல்விழி கலந்துகொண்டது அமைந்துள்ளது. கலைஞரின் குடும்பத்திலிருந்து ஒருவர் இந்த விழாவில் பங்கேற்றது, கோட்டை முதல் டெல்லி வரை பல்வேறு அரசியல் கணக்குகளை மாற்றி அமைத்துள்ளது. விரைவில் கயல்விழி தவெகவில் இணைவார் என்ற தகவல் பரவி வரும் நிலையில், இது மதுரை அரசியலில் மிகப்பெரிய அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.
தனது தந்தை மு.க. அழகிரிக்கு திமுகவில் ஏற்பட்ட அவமதிப்புகள் மற்றும் அவரது வாரிசுகளுக்கு வாய்ப்புகள் மறுக்கப்பட்ட விரக்தியின் உச்சமாகவே, கயல்விழியின் இந்த அரசியல் நகர்வு பார்க்கப்படுகிறது. வரும் உள்ளாட்சி தேர்தலில் மதுரை மாநகராட்சி மேயர் பதவியை குறிவைத்து கயல்விழி காய்களை நகர்த்தி வருவதாக கூறப்படுகிறது. ஒரு காலத்தில் “அழகிரியின் கோட்டை” என்று அழைக்கப்பட்ட மதுரையில், மீண்டும் அழகிரி குடும்பத்தின் செல்வாக்கு தவெகவின் மூலம் வெளிப்பட்டால், அது தென் மாவட்டங்களில் திமுகவின் வாக்கு வங்கியைச் சிதறடிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
திமுக தலைமையின் மீதான அதிருப்தியில் இருக்கும் அழகிரி ஆதரவாளர்கள் கயல்விழியின் பின்னால் அணிதிரண்டால், அது வரவிருக்கும் உள்ளாட்சி தேர்தல்களில் திமுகவிற்கு பெரும் சவாலாக அமையும். விஜயின் தமிழக வெற்றிக் கழகம், கயல்விழியை இணைப்பதன் மூலம் மதுரையில் தனது வேர்களை வலுப்படுத்த துடிக்கிறது. இது தென் மாவட்ட அரசியல் போக்கையே மாற்றியமைக்கும் ஒரு அதிரடி திருப்பமாகவே கருதப்படுகிறது.

