ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக முல்லன்பூரில் நடைபெற்று வரும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில், இந்திய சுழற்பந்து வீச்சு கூட்டணி ஒரு புதிய சாதனையை பதிவு செய்துள்ளது.
ரவிச்சந்திரன் அஸ்வினின் ஓய்வு மற்றும் ரவீந்திர ஜடேஜா அணியில் இல்லாத நிலையில் இந்திய அணி தனது சுழற்பந்து வீச்சை முழுமையாக மாற்றியமைத்துள்ளது. இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கும் நோக்கில், ராஜஸ்தானை சேர்ந்த ஆல்-ரவுண்டர் மானவ் சுதாருக்கு இந்த டெஸ்டில் அறிமுக வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
அவருடன் குல்தீப் யாதவ் மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இணைந்து விளையாடுகிறார்கள். இப்போட்டி தொடங்குவதற்கு முன், இந்த மூவரின் ஒட்டுமொத்த டெஸ்ட் விக்கெட்டுகளின் எண்ணிக்கை வெறும் 112 மட்டுமே (குல்தீப் 76, சுந்தர் 36).
கடந்த 2001-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சென்னை டெஸ்டிற்கு பிறகு, இந்திய மண்ணில் குறைந்த விக்கெட்டுகளுடன் களம் கண்ட இந்திய சுழற்பந்து வீச்சு கூட்டணி இதுவேயாகும். மேலும், 2010 நவம்பருக்கு பிறகு அஸ்வின் அல்லது ஜடேஜா ஆகிய இருவருமே இல்லாமல் இந்தியா தனது சொந்த மண்ணில் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டியும் இதுவாகும்.
மறுபுறம், இந்திய பேட்ஸ்மேன்கள் இப்போட்டியில் அபாரமாக செயல்பட்டு 564/8 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்தனர். கேப்டன் சுப்மன் கில் (126) மற்றும் கே.எல்.ராகுல் (100) ஆகியோர் சதமடித்தும், சாய் சுதர்சன் (81), ரிஷப் பந்த் (81), வாஷிங்டன் சுந்தர் (52*) ஆகியோர் அரைசதமடித்தும் அசத்தினர். ஆப்கானிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 113 ரன்கள் மட்டுமே எடுத்து 451 ரன்கள் பின் தங்கியுள்ளது.

