கனடாவின் முன்னணி விமான சேவை நிறுவனமான ஏர் கனடாவில், முறையான தகுதியுடைய உரிமம் இன்றி 16 ஆண்டுகளாக 900-க்கும் மேற்பட்ட விமானங்களை இயக்கிய முன்னாள் விமானி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 59 வயதான ஜெஃப்ரி வால் என்ற அந்த நபர், ஏர்லைன் டிரான்ஸ்போர்ட் பைலட் உரிமம் இல்லாமலேயே கேப்டனாக பதவி வகித்து வந்ததாக பீல் பிராந்திய காவல்துறை தெரிவித்துள்ளது. 2009-ஆம் ஆண்டு முதல் போயிங் 767 மற்றும் 787 போன்ற பிரம்மாண்ட விமானங்களை இவர் இயக்கி வந்துள்ளார்.
போக்குவரத்து கனடா அமைப்பின் ஒழுங்குமுறை ஆய்வைத் தொடர்ந்து, ‘புராஜெக்ட் இகாரஸ்’ என்ற பெயரில் நடத்தப்பட்ட விசாரணையில் இந்த மோசடி வெளிச்சத்திற்கு வந்தது. ஜெஃப்ரி வால் தனது தகுதிகளை தவறாக சித்தரித்து, போலி ஆவணங்கள் மூலம் நிறுவனத்தையும் ஒழுங்குமுறை அமைப்பையும் ஏமாற்றியதாக காவல்துறை துணைத் தலைவர் நிக் மிலினோவிச் தெரிவித்துள்ளார். சுமார் 27 ஆண்டுகள் ஏர் கனடாவில் பணியாற்றிய இவர், 2025-ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள ஏர் கனடா நிறுவனம், இது குறித்து விரிவான ஆய்வு நடத்தப்பட்டதாகவும், வேறு எந்த விமானிகளிடமும் இதுபோன்ற முறைகேடுகள் கண்டறியப்படவில்லை என்றும் உறுதியளித்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ள ஜெஃப்ரி வால் மீது 5,000 டாலருக்கும் அதிகமான மோசடி, போலி ஆவணங்களைப் பயன்படுத்துதல் உள்ளிட்ட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் வரும் ஜூன் 29-ஆம் தேதி பிராம்ப்டன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

