முந்தைய திமுக ஆட்சிக்காலத்தில் பொதுமக்களின் குறைகளை தீர்ப்பதற்காக தொடங்கப்பட்ட ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் கீழ் பெறப்பட்ட மனுக்கள் அனைத்தும் ஆற்றில் மிதப்பதாக வெளியாகி இருக்கும் தகவல் தமிழக அரசியல் களத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் வைகை ஆற்றில், பொதுமக்கள் தங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டத்தின் மூலம் வழங்கிய மனுக்கள் அனைத்தும் கேட்பாரற்று தூக்கி வீசப்பட்டு கிடக்கின்றன.
இதுகுறித்த வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் மிக வேகமாக பரவி, பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை உண்டாக்கியுள்ளது. “மக்களை தேடி சென்று மனுக்களை பெற்றுக்கொண்டு, இறுதியில் அவற்றை ஆற்றில் கொட்டுவதுதான் உங்களுடன் ஸ்டாலின் திட்டமா?” என பொதுமக்கள் பலரும் தங்களின் கண்டனங்களையும் விமர்சனங்களையும் சமூக வலைதளங்களில் பதிவு செய்து வருகின்றனர்.
முன்னதாக, தற்போதைய தவெக அரசின் அமைச்சர் வன்னியரசு அவர்கள் பேசும்போது, “மனுக்களை வாங்கி கொண்டு ஏதோ ஒரு மூலையில் வைத்துவிட்டுப் போகிற ஆட்கள் நாங்கள் இல்லை; மக்களின் ஒவ்வொரு பிரச்சினையையும் முழுமையாகச் சரிசெய்து, அதற்கான உரிய சான்றிதழையும் வழங்குவோம்” என்று உறுதியளித்திருந்தார். இத்தகைய சூழலில், முந்தைய திமுக ஆட்சியினர் மக்களிடம் இருந்து வாங்கிய மனுக்களை முறையான தீர்வு காணாமல் ஆறுகளிலும் குப்பைகளிலும் கொட்டியிருப்பது, மக்கள் மத்தியில் பெரும் அதிருப்தியையும் சலசலப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

