இலங்கை சிறைச்சாலை வரலாற்றையே உலுக்கிய 2012ஆம் ஆண்டு வெலிக்கடை சிறைச்சாலை வன்முறைச் சம்பவத்திற்குப் பின்னர் , 14 ஆண்டுகள் கழித்து மிக மோசமான மற்றும் கொடூரமானதொரு கலவரம் நீர்கொழும்பு சிறைச்சாலையில் வெடித்துள்ளது.
நேற்று ஆரம்பமான இந்த வன்முறையில் இதுவரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது என அதிரடித் தகவல்கள் வெளியாகியுள்ளன.
சுமார் 1,800 கைதிகள் தடுத்து வைக்கப்பட்டுள்ள நீர்கொழும்பு சிறைச்சாலையில், விசாரணைக் கைதிகள் குழுவிற்கும், சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழுவிற்கும் இடையே நேற்று (05) மதியம் 1 மணியளவில் இந்த மோதல் வெடித்தது.
பிரபல பாதாள உலகக் கும்பல் உறுப்பினரான ‘பூரு மூனா’ என்பவனுடன் நெருங்கிய தொடர்புள்ள, சுரேஷ் என்ற போதைப்பொருள் கடத்தல்காரனே இந்த வன்முறைக்குத் தலைமை தாங்கியுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்குள் நடந்த காட்டிக்கொடுப்பு தொடர்பான ஒரு சம்பவமே இந்த இருதரப்புப் பகைக்குக் காரணமாகும்.
நேற்று நடந்த ஆரம்பக்கட்ட மோதல்களில் 2 கைதிகள் உயிரிழந்ததோடு, 38 பேர் காயமடைந்தனர்.
அதிகாலைக்குள் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டது.
இன்று காலை கைதிகளுக்கு உணவு வழங்கச் சென்றபோது, மீண்டும் பயங்கர வன்முறை வெடித்தது.
ஆக்ரோஷமடைந்த கைதிகள், சிறை அதிகாரிகளைத் துரத்தித் துரத்தித் தாக்கினர்.
அதிகாரிகள் பிரதான வாயிலை நோக்கி ஓடியபோது, கைதிகள் அவர்களைத் துரத்திச் சென்று, சிறையின் பிரதான வாயிலை உடைத்துக்கொண்டு வெளியே தப்பியோட முயன்றனர்.
இதன்போது அதிகாரிகள் தற்காப்புக்காகக் குறைந்தபட்ச பலத்தைப் பிரயோகித்துக் கைதிகளைக் கட்டுப்படுத்தினர்.
கைதிகள் சிறையிலுள்ள விசேட அறைகளின் சுவர்களை உடைத்து, அங்கிருந்த விசேட கைதிகள் மீது தாக்குதல் நடத்தினர்.
அதேநேரம், மற்றொரு குழுவினர் போதையேறும் நோக்கில் சிறை மருந்தகத்திற்குள் புகுந்து, அங்கிருந்த வலி நிவாரணி மாத்திரைகளை அளவுக்கு அதிகமாக உட்கொண்டனர்.
இன்று காலை மீண்டும் வெடித்த கொடூர மோதலில் பலி எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், காயமடைந்த சுமார் 100 பேர் நீர்கொழும்பு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

