இம்சை அரசன் இரண்டாம் புலிகேசி படத்தை இயக்கிய சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் நடித்து 2015ம் வருடம் வெளியான திரைப்படம் புலி. இந்த படத்தில் பிரபு, ஸ்ருதிஹாசன், ஸ்ரீதேவி மற்றும் கன்னட நடிகர் சுதீப் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் ஒரு ஆக்சன் ஃபேண்டஸி திரைப்படமாக உருவாகியிருந்தது.
இந்த படத்தின் முதல் காட்சிகளிலேயே வில்லனின் அடியாள் ஒருவரின் காலை பிடித்துக் கொண்டு விஜய் கெஞ்சுவது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது. விஜய் ரசிகர்கள் இதை விரும்பவில்லை. எனவே முதல் காட்சியிலேயே இந்த படம் விழுந்துவிட்டது. இதனால் படத்திற்கு நெகட்டிவ் விமர்சனங்களும் எழுந்தது. இதனால் இந்த படம் பாக்ஸ் ஆபிசில் தோல்வியடைந்தது. தற்போது வரை விஜயை பிடிக்காதவர்கள் அவரை ட்ரோல் செய்யும் போது சுறா மற்றும் புலி ஆகிய இரண்டு படங்களின் பெயரையும் பயன்படுத்துவதுண்டு..
இந்நிலையில், புலி படத்தில் ஒளிப்பதிவாளராக வேலை செய்தவரும் நடிகருமான நட்டி நடராஜ் சமீபத்தில் ஊடகம் ஒன்றில் பேசிய போது ஒரு முக்கிய தகவலை கூறியிருந்தார். ‘விஜய் சார் தனது ரசிகர்களை தாண்டி 8 முதல் 15 வயது உடைய குழந்தைகளை கவரும் வகையில் நடித்த திரைப்படம்தான் புலி.. ஆனால் மாஸ் ஆக்சன் படமாக விளம்பரப்படுத்தப்பட்டதால் இந்த படம் பாக்ஸ் ஆபிஸில் தோல்வியடைந்தது. குழந்தைகளுக்கான படம் என்று புரமோஷன் செய்திருந்தால் கண்டிப்பாக புலி ஒரு ஹிட் படமாக அமைந்திருக்கும்’ எனக் கூறியிருக்கிறார்.

