டொராண்டோ மற்றும் தெற்கு ஒன்டாரியோவின் ஏனைய பகுதிகளுக்கு கனடா சுற்றாடல் திணைக்களம் மஞ்சள் நிற வெப்ப எச்சரிக்கையை விடுத்துள்ளது. இந்த வாரத்தில் டொரொன்டோவில் கடும் வெப்பமான காலநிலை நிலவக்கூடும் என்பதால் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. பகல் நேர வெப்பநிலை 30 பாகை செல்சியஸின் நடுப்பகுதியை எட்டக்கூடும் எனவும், காற்றில் உள்ள ஈரப்பதன் காரணமாக அது 45 பாகை செல்சியஸ் வரை உணரப்படலாம் எனவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இந்த வெப்ப அலையானது திங்கட்கிழமை ஆரம்பமாகி, புதன் அல்லது வியாழக்கிழமை மாலை வரை நீடிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக செவ்வாய்க்கிழமை இந்த வெப்ப அலையின் உச்சக்கட்ட நாளாக இருக்கும். சில பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை 36 பாகை செல்சியஸை நெருங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இரவு நேரங்களிலும் வெப்பநிலை 20 பாகை செல்சியஸிற்குக் கீழ் குறையாது என்பதால், குடியிருப்பாளர்கள் வெப்பத்தின் தாக்கத்திலிருந்து தப்பிப்பது சவாலானதாக இருக்கும்.
வெப்பம் மற்றும் ஈரப்பதன் மிக்க காற்றினால் காற்றின் தரம் மோசமடையக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. இதனால் காற்றின் தர ஆரோக்கிய குறியீடு அதிக ஆபத்துள்ள வகையை நெருங்கக்கூடும். பொதுமக்கள் தங்களையும் மற்றவர்களையும் பாதுகாத்துக் கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக முதியவர்கள் மற்றும் தனியாக வசிப்பவர்களின் உடல்நலம் குறித்து தினசரி பலமுறை விசாரித்துக்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

