கனடா நாட்டின் சிக்கலான வரி அமைப்பை எளிமைப்படுத்தும் நோக்கில், புதிய வரிக் கொள்கை சீர்திருத்தங்களை ஒட்டாவா அரசு படிப்படியாக அமுல்படுத்தத் திட்டமிட்டுள்ளது. பிரதமர் மார்க் கார்னியின் வரவுசெலவுத் திட்ட ஆலோசனைக் குழு உறுப்பினரும் நாடாளுமன்ற உறுப்பினருமான வேய்ன் லாங் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். தற்போதைய வரி நடைமுறைகள் வணிகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பெரும் சுமையாக இருப்பதை அரசு ஒப்புக்கொண்டுள்ளது. இந்தச் சீர்திருத்தங்களில் சிறு வணிகங்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 40 ஆண்டுகளில் மேற்கொள்ளப்படாத அளவிலான இந்த வரி மாற்றங்கள், நாட்டின் பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கையாக அமையவுள்ளது. சர்வதேச முதலீட்டாளர்கள் கனடாவில் முதலீடு செய்யத் தயங்குவதற்கு சிக்கலான வரி விதிகளே காரணம் என வேய்ன் லாங் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கிடையே, கன்சர்வேடிவ் கட்சி அரசின் இந்த மெதுவான அணுகுமுறையை விமர்சித்துள்ளது. பொருளாதாரத்தை முடக்கும் பழைய முறையை மாற்ற தீவிர நடவடிக்கை தேவை என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். கனடிய சுதந்திர வணிக கூட்டமைப்பு இந்த முடிவை வரவேற்றாலும், வரவுசெலவுத் திட்டத்தில் இது முறையாகப் பிரதிபலிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளது.

