சட்டப்பேரவையில் காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் முதல்வர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்திருந்த நிலையில், அதற்கு திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பதிலடி கொடுத்துள்ளார். குறிப்பாக சர்க்காரியா கமிஷன் குறித்த விஜய்யின் பேச்சை அவர் கடுமையாக விமர்சித்திருப்பது தமிழக அரசியலில் புதிய விவாதத்தை உருவாக்கியுள்ளது.
செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.எஸ். பாரதி, விஜய்க்கு எழுதிக் கொடுக்கப்பட்ட “பழைய பஞ்சாங்க” ஸ்கிரிப்டையே அவர் சட்டப்பேரவையில் பேசியதாக விமர்சித்தார். மேலும், உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் ஆட்சி தொடர்பாக முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிக்காமல், பல ஆண்டுகளுக்கு முந்தைய விவகாரங்களை விஜய் எடுத்துப் பேசியதாக அவர் கூறினார்.
சர்க்காரியா கமிஷன் தொடர்பாகவும் ஆர்.எஸ். பாரதி பல கேள்விகளை எழுப்பினார். குறிப்பாக அண்ணா சாலையில் உள்ள அண்ணா தியேட்டர் யாருக்குச் சொந்தமானது என்பது குறித்து அப்போது புகார் அளிக்கப்பட்டதாக கூறிய அவர், அந்த விவகாரம் குறித்து விஜய் முழுமையாக பேசத் தயாரா என்று சவால் விடுத்தார்.
மேலும், சர்க்காரியா கமிஷன் நடைபெற்ற காலகட்டத்தில் தான் கருணாநிதியுடன் இருந்ததாகவும், அதன் பின்னணி தனக்கு தெரியும் என்றும் பாரதி தெரிவித்தார். விஜய் முன்வைக்கும் வரலாற்றுக் குறிப்புகள் முழுமையான ஆதாரங்களுடன் இருக்க வேண்டும் என்பதே அவரது வாதமாக உள்ளது.

