கர்நாடகாவில் பத்ரா நீர்த்தேக்கத்திலிருந்து விவசாயத்திற்கு தண்ணீர் கோரி சென்ற விவசாயிகளிடம், பாஜக எம்.எல்.ஏ பி.பி. ஹரீஷ் குறித்து மாநில அமைச்சர் எஸ்.எஸ். மல்லிகார்ஜுன் தரக்குறைவாக பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விவசாயிகள் தங்களை சந்திக்க எம்.எல்.ஏ அனுப்பியதாக கூறியதும் ஆத்திரமடைந்த அமைச்சர், பாஜக எம்.எல்.ஏ-வை தகாத வார்த்தைகளால் திட்டியதுடன், அவரை செருப்பால் அடிக்க வேண்டும் என்றும் ஆக்ரோஷமாக பேசியுள்ளார். அமைச்சரின் இந்த நாகரிகமற்ற பேச்சுக்கு பாஜக எம்.எல்.ஏ ஹரீஷ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றாமல் அமைச்சர்கள் இதுபோன்று அநாகரிகமாக நடப்பது கண்டனத்திற்குரியது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், அமைச்சரின் இந்த செயலுக்கு மாநில மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.
இதற்கிடையே, கர்நாடக பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா அமைச்சரின் பேச்சுக்கு கடுமையான கண்டனத்தை பதிவு செய்துள்ளார். அமைச்சரின் மிரட்டல் மற்றும் அவதூறான வார்த்தைகள் எம்.எல்.ஏ-வை மட்டுமல்லாமல், அந்தத் தொகுதி மக்களையும் அவமதிக்கும் செயலாகும் என்று அவர் விமர்சித்துள்ளார். அதிகார மமதையில் அமைச்சர்கள் இதுபோல் நடந்துகொண்டால் மக்கள் உரிய பதிலடி தருவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

