பிசிசிஐ வெளியிட்டுள்ள 2025-26 ஆம் ஆண்டிற்கான புதிய மத்திய ஒப்பந்தத்தில், ‘A+’ பிரிவு நீக்கப்பட்டுள்ளது ஜஸ்பிரித் பும்ராவிற்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக ஆண்டுக்கு ரூ. 7 கோடி ஊதியம் பெற்று வந்த பும்ரா, தற்போது ‘A’ பிரிவுக்கு மாற்றப்பட்டதால் அவரது ஊதியம் ரூ. 5 கோடியாக குறைந்துள்ளது. ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி போன்ற சீனியர்கள் சில போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றதால் அவர்களின் ஊதிய குறைப்பு இயல்பானது என்றாலும், அனைத்து வடிவிலான போட்டிகளிலும் சிறப்பாக விளையாடும் பும்ராவிற்கு இது அநீதி என விமர்சனங்கள் எழுந்தன.
இதனை கருத்தில் கொண்ட பிசிசிஐ, பும்ராவிற்கு ஏற்பட்டுள்ள ரூ. 2 கோடி இழப்பை ஈடுகட்ட மாற்று வழிகளை ஆராய்ந்து வருகிறது. பும்ரா தவிர அக்ஸர் படேல், கே.எல்.ராகுல் மற்றும் ரிஷப் பண்ட் போன்ற வீரர்களின் ஒப்பந்த நிலைகளும் மறுபரிசீலனை செய்யப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
சிறப்பாக செயல்படும் வீரர்களின் ஊதியத்தை உயர்த்துவது குறித்து பிசிசிஐ விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

