மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அமெரிக்கா தனது தோல்வியை ஒரு ‘தூதரக உடன்படிக்கை’ என்று கூறி மறைக்க முயல்வதாக ஈரானின் புரட்சிகர காவல்படை எச்சரித்துள்ளது.
ஈரானுடன் பேச்சுவார்த்தை நடப்பதாக அதிபர் டிரம்ப் கூறியதை மறுத்துள்ள ஈரான், இது நிதிச் சந்தைகளைக் கையாளுவதற்கான ‘போலிச் செய்தி’ என்று சாடியுள்ளது. அமெரிக்காவை ஒரு நம்பகமான கூட்டாளியாகக் கருத வேண்டாம் என்றும், வளைகுடா நாடுகள் இஸ்ரேலுக்கு எதிராக ஒன்றுதிரள வேண்டும் என்றும் ஈரான் அழைப்பு விடுத்துள்ளது.
நேரடி பேச்சுவார்த்தைகளை ஈரான் மறுத்தாலும், பாகிஸ்தான் வழியாக ரகசிய செய்திகள் பரிமாறப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் மத்தியஸ்தம் செய்ய முன்வந்துள்ள நிலையில், வரும் வார இறுதியில் இஸ்லாமாபாத்தில் பேச்சுவார்த்தை நடக்க வாய்ப்புள்ளது.
இதற்கிடையில், அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய இலக்குகள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தொடர்ந்து வருகிறது. ஹார்முஸ் ஜலசந்தி இன்னும் ஈரானின் கட்டுப்பாட்டிலேயே உள்ளதால், போர் நிறுத்தம் ஏற்படும் வரை உலகளாவிய எரிசக்தி நெருக்கடி தொடரும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

