இந்தியாவின் முதல் டிஜிட்டல் மக்கள் தொகை கணக்கெடுப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 5.72 லட்சத்திற்கும் அதிகமான குடும்பங்கள் இணையதளம் வாயிலாக தங்களது விவரங்களைச் சுய-பதிவு செய்துள்ளதாக இந்தியப் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் தெரிவித்துள்ளார்.
சுதந்திரத்திற்கு பிறகு நடக்கும் எட்டாவது கணக்கெடுப்பான இது, இரண்டு கட்டங்களாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. முதல் கட்டமாக, வீடுகளை பட்டியலிடுதல் மற்றும் வீட்டு வசதி கணக்கெடுப்பு பணிகள் ஏப்ரல் முதல் செப்டம்பர் 2026 வரை நடைபெற உள்ளன.
இதில் வீட்டின் நிலை, வசதிகள் மற்றும் சொத்துக்கள் குறித்த விவரங்கள் சேகரிக்கப்படும். அந்தமான் நிக்கோபார், டெல்லி, கோவா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் ஏப்ரல் 1 முதல் 15 வரை சுய-பதிவுக்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027 பிப்ரவரியில் நடைபெறும். இந்த முறை வரலாற்றில் முதன்முறையாக சாதி வாரியான கணக்கெடுப்பும் நடத்தப்பட உள்ளது. இதற்காக மத்திய அரசு 11,718.24 கோடி ரூபாய் ஒதுக்கியுள்ளது.
ஆன்லைன் மூலம் விவரங்களை பதிவு செய்வது வேகமானது மற்றும் பாதுகாப்பானது என்பதால், பொதுமக்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு அரசு கேட்டுக்கொண்டுள்ளது.

