எப்.ஐ.ஆர் படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு, இயக்குனர் மனு ஆனந்த் இயக்கத்தில் ஆர்யா, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள திரைப்படம் ‘மிஸ்டர் எக்ஸ்’ . நேற்று திரையரங்குகளில் வெளியான இப்படம் கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், படத்தின் முதல் நாள் வசூல் நிலவரம் தற்போது வெளியாகியுள்ளது.
ஒரு ஸ்பை த்ரில்லர் பாணியில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில், மஞ்சு வாரியர், ரைசா வில்சன், அதுல்யா ரவி, மற்றும் சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் என ஒரு மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளது. கதைக்களத்திற்கு ஏற்றவாறு படம் முழுவதும் ஆக்சன் மற்றும் சண்டைக் காட்சிகளுக்கு அதீத முக்கியத்துவம் கொடுத்து பிரம்மாண்டமாக எடுக்கப்பட்டுள்ளது. ஆர்யா மற்றும் கௌதம் கார்த்திக் இருவருமே தங்களது உடலமைப்பை இதற்காக மாற்றி, ஆக்ஷனில் மிரட்டியுள்ளனர்.
படத்தைப் பொறுத்தவரை, நேற்றைய முதல் காட்சியில் இருந்தே ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்று வருகிறது. சண்டைக்காட்சிகள், ஸ்டண்ட் கொரியோகிராபி மற்றும் தொழில்நுட்ப விஷயங்கள் ஹாலிவுட் தரத்தில் இருப்பதாகப் பாராட்டப்பட்டாலும், திரைக்கதையில் இன்னும் கொஞ்சம் சுவாரஸ்யத்தைக் கூட்டியிருக்கலாம் என்ற கருத்தும் பரவலாக முன்வைக்கப்படுகிறது. ஆக்சன் பிரியர்களுக்கு இப்படம் விருந்தாக அமைந்தாலும், சாதாரண குடும்ப ரசிகர்களை முழுமையாக ஈர்க்கத் தவறியுள்ளதாக விமர்சகர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கலவையான விமர்சனங்களின் தாக்கம் படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூலிலும் எதிரொலித்துள்ளது. நேற்று தமிழகம் முழுவதும் மிஸ்டர் எக்ஸ் படத்திற்கு மொத்தம் 1686 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு மக்கள் கூட்டம் வராததால், முதல் நாளான நேற்று படம் சுமார் ரூ.65 லட்சம் மட்டுமே வசூல் செய்துள்ளதாக பாக்ஸ் ஆபிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இரண்டு முன்னணி ஹீரோக்கள் மற்றும் மிகப்பெரிய நட்சத்திர பட்டாளம் நடித்திருந்தும், முதல் நாள் வசூல் ஒரு கோடியைத் தாண்டாதது சற்று ஏமாற்றத்தையே அளித்துள்ளது. இருப்பினும், சனி மற்றும் ஞாயிறு ஆகிய வார இறுதி நாட்கள் என்பதால், இன்று மற்றும் நாளை திரையரங்குகளில் மக்கள் கூட்டம் அதிகரித்து, படத்தின் வசூல் கணிசமாக உயரும் என படக்குழு மற்றும் தியேட்டர் உரிமையாளர்கள் தரப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.

