செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பிரபலங்களின் புகைப்படங்களை அனுமதி இன்றி மாற்றி அமைக்கும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்துள்ளது. அமிதாப் பச்சன், சல்மான் கான் போன்ற பிரபலங்கள் ஏற்கனவே பாதுகாக்க சட்ட நடவடிக்கை எடுத்துள்ள நிலையில், தற்போது நடிகை ஆலியா பட் இது போன்ற ஒரு சிக்கலில் சிக்கியுள்ளார்.
பாகிஸ்தானைச் சேர்ந்த ‘Wajayesha Official’ என்ற ஆடை நிறுவனம், ஆலியா பட்டின் புகைப்படங்களை AI தொழில்நுட்பம் மூலம் மாற்றி, தங்கள் நிறுவனத்தின் ஆடைகளை அவர் அணிந்திருப்பது போல சித்தரித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளது.
இதற்கு ஆலியா பட்டின் ரசிகர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். நடிகையின் அனுமதியின்றி இத்தகைய விளம்பரத்தை செய்வது மலிவான தந்திரம் என்று ரசிகர்கள் விமர்சித்தாலும், அந்த நிறுவனம் எவ்வித அச்சமும் இன்றி பதிலளித்து வருவது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிரபலங்களின் பெயர், தோற்றம், குரல் மற்றும் கையொப்பம் ஆகியவற்றை அவர்களின் அனுமதி இன்றி வணிக ரீதியாக பயன்படுத்துவதை தடுப்பதே ஆளுமை உரிமையின் நோக்கமாகும். இது போன்ற செயல்கள் ஒருவரின் தனியுரிமையை மீறுவதோடு, தவறான தகவல்களைப் பரப்பும் செயலாகவும் பார்க்கப்படுகிறது.
ஆலியா பட் இதுகுறித்து உரிய சட்ட நடவடிக்கை எடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

