தமிழ் சினிமா ரசிகர்களால் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் சீயான் விக்ரமின் ‘துருவ நட்சத்திரம்’ திரைப்படம் வெளியாவதில் இருந்த சட்டச் சிக்கல்கள் நீங்கி, தற்போது ரிலீசுக்கு பச்சைக்கொடி காட்டப்பட்டுள்ளது.
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில், நடிகர் விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பல நட்சத்திரங்களின் நடிப்பில் கடந்த 2016-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட படம் துருவ நட்சத்திரம். ஹாலிவுட் தரத்திலான ஸ்பை-த்ரில்லராக உருவான இப்படம், கவுதம் மேனனின் முந்தைய தயாரிப்புகளில் ஏற்பட்ட நிதி நெருக்கடி மற்றும் கடன் சிக்கல்கள் காரணமாக கடந்த 7 ஆண்டுகளாக திரைக்கு வர முடியாமல் முடங்கிக் கிடந்தது.
இந்நிலையில், இப்படம் தொடர்பான வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி, படத்தின் வெளியீடு குறித்து முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதன்படி, வரும் ஜூன் 15-ஆம் தேதிக்குள் துருவ நட்சத்திரம் படத்தை வெளியிட நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் பங்குதாரராக உள்ள ‘கொண்டாடுவோம் என்டர்டெயின்மெண்ட்’ நிறுவனம் இப்படத்தை வெளியிடலாம் என நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
மேலும் ஜூன் 15-க்குள் படத்தை வெளியிட முடியாத பட்சத்தில், கூடுதல் அவகாசம் தேவைப்பட்டால் மீண்டும் நீதிமன்றத்தை அணுகலாம். படத்தின் வெளியீட்டிற்கு மனுதாரர்களான புண்ணியமூர்த்தி மற்றும் பிரேம்குமார் ஆகியோர் எந்தவிதமான முட்டுக்கட்டையோ அல்லது தடைகளோ ஏற்படுத்தக் கூடாது என நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
தொடர் நிதிச் சிக்கல்களால் பலமுறை ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டு தள்ளிப்போன துருவ நட்சத்திரம், தற்போது நீதிமன்ற உத்தரவின் மூலம் ஒரு தெளிவான பாதையைப் பெற்றுள்ளது. இதனால் விக்ரம் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். ஜூன் மூன்றாவது வாரத்தில் ஸ்டைலிஷ் ஏஜென்ட் ஜான் கதாபாத்திரத்தில் விக்ரமை திரையில் காண கோலிவுட் ஆவலோடு காத்திருக்கிறது.

