ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் கல்வி மற்றும் தொழில்நுட்பத்தின் வியக்கத்தக்க இணைப்பு அரங்கேறி வருகிறது. செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான புதிய மதிப்பீட்டு முறை, 1,000 அரசு பள்ளிகளில் சுமார் 70,000 மாணவர்களின் 3 லட்சம் தேர்வு தாள்களை வெறும் மூன்றே நாட்களில் திருத்தி சாதனை படைத்துள்ளது. முன்னதாக வாரக்கணக்கில் நீடித்த இந்த செயல்முறை, தற்போது நொடிகளில் முடிக்கப்படுகிறது.
இந்த முன்னோடி திட்டத்தின் இரண்டாம் கட்டத்தில், 6 முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி, ஆங்கிலம், கணிதம், அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய ஐந்து பாடங்களில் தேர்வுகள் நடத்தப்பட்டன.
ஆசிரியர்கள் ஒரு பிரத்யேக AI செயலியை பயன்படுத்தி, கையால் எழுதப்பட்ட விடைத்தாள்களை ஸ்கேன் செய்கிறார்கள். இது உடனடியாக முடிவுகளை ஆய்வு செய்து அறிக்கைகளை வழங்குகிறது. இதனால் ஆசிரியர்கள் விடைத்தாள் திருத்தும் சுமையிலிருந்து விடுபட்டு, மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்துவதில் அதிக கவனம் செலுத்த முடிகிறது.
இந்த முறையின் சிறப்பம்சமாக, மாணவர்களுக்கு மதிப்பெண்களுக்கு பதிலாக Skill Cards வழங்கப்படுகின்றன. இது மாணவர்களின் குறிப்பிட்ட பாடத்திறன்களில் உள்ள பலம் மற்றும் பலவீனங்களை துல்லியமாக சுட்டிக்காட்டுகிறது.
அக்டோபர் 2025-ல் சிறிய அளவில் தொடங்கப்பட்ட இத்திட்டம், தற்போது ஜோத்பூரின் அனைத்து 15 பிளாக்குகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

