டொராண்டோ மாநகராட்சியில் கோடை கால வெப்பம் ஆண்டுதோறும் அதிகரித்து வரும் நிலையில், வாடகை குடியிருப்புகளில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய புதிய சட்ட திருத்தம் கொண்டுவரப்பட்டுள்ளது. ‘உட்புற வெப்பநிலை தரநிலை விதி’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய விதியானது ஜூன் 1, 2026 முதல் முழுமையாக நடைமுறைக்கு வரவுள்ளது.
இந்த புதிய சட்டத்தின்படி, ‘ரென்ட்சேஃப் டொராண்டோ’ திட்டத்தின் கீழ் வரும் அனைத்து வாடகை கட்டிடங்களிலும், வீடுகளுக்குள் தனிப்பட்ட குளிர்சாதன வசதி இல்லையென்றால், கட்டிடத்தின் பொதுவான இடங்களான வரவேற்பு அறைகள், சலவைக்கூடங்கள் மற்றும் உடற்பயிற்சிக் கூடங்களில் குளிர்ச்சி வசதி செய்யப்பட வேண்டும். ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரையிலான காலப்பகுதியில் இத்தகைய பொதுவான இடங்களில் வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸுக்கும் மிகாமல் இருப்பதை கட்டிட உரிமையாளர்கள் உறுதி செய்ய வேண்டும்.
கட்டிட உரிமையாளர்கள் புதிய குளிர்சாதனக் கருவிகளை வீடுகளுக்குள் பொருத்த வேண்டும் என்பது கட்டாயமில்லை என்றாலும், ஏற்கனவே இருக்கும் கருவிகளைச் சீராகப் பராமரிக்க வேண்டியது அவர்களின் கடமையாகும். மேலும், குறைந்த வருமானம் கொண்ட வாடகைதாரர்களுக்கு உதவும் வகையில், 2026 ஆம் ஆண்டில் ஆயிரம் இலவச நகர்த்தக்கூடிய குளிர்சாதனக் கருவிகளை வழங்கவும் மாநகராட்சி முடிவு செய்துள்ளது. குளிர்காலத்திற்கான குறைந்தபட்ச 21 டிகிரி வெப்பநிலை விதி அக்டோபர் 1 முதல் மே 15 வரை தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

