மத்திய அரசின் எரிபொருள் சேமிப்பு மற்றும் சிக்கன நடவடிக்கைகளுக்கு வலுசேர்க்கும் வகையில், டெல்லி முதலமைச்சர் ரேகா குப்தா அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். இதன்படி, டெல்லி அரசு ஊழியர்கள் இனி வாரத்தில் இரண்டு நாட்கள் வீட்டிலிருந்தே பணியாற்ற அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
சர்வதேச அளவில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு மற்றும் விலை உயர்வைக் கருத்தில் கொண்டு, பொதுமக்களும் வாகனப் பயன்பாட்டைக் குறைத்துக் கொள்ள வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
முதலமைச்சர் ரேகா குப்தா முன்மாதிரியாகத் திகழும் வகையில், தனது பாதுகாப்பு வாகனங்களின் எண்ணிக்கையை சுமார் 60 சதவீதம் வரை குறைத்துள்ளார். முன்பு அதிக எண்ணிக்கையிலான வாகனங்களுடன் சென்ற அவரது பாதுகாப்புப் படை, தற்போது வெறும் 4 வாகனங்களாகக் குறைக்கப்பட்டுள்ளது.
இந்த நான்கு வாகனங்களில் இரண்டு மின்சார வாகனங்களாக மாற்றப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், டெல்லி அரசு ‘மேரா பாரத் மேரா யோக்டான்’ என்ற பிரச்சாரத்தைத் தொடங்கியுள்ளது. இதன் ஒரு பகுதியாக, ஒவ்வொரு திங்கட்கிழமையும் ‘மண்டே மெட்ரோ’ தினமாகக் கடைப்பிடிக்கப்படும்.
அன்றைய தினம் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகள் அனைவரும் மெட்ரோ ரயிலில் பயணம் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர். அடுத்த ஆறு மாதங்களுக்குப் புதிய பெட்ரோல் அல்லது டீசல் வாகனங்கள் வாங்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

