ஜூன் 2026 முதல் ஒன்ராறியோ மாகாணத்தில் குடியிருப்பாளர்கள் மற்றும் நுகர்வோரைப் பாதிக்கும் பல புதிய சட்டங்கள் மற்றும் விதிமுறைகள் நடைமுறைக்கு வருகின்றன. டொராண்டோ மாநகராட்சி அங்கீகரித்துள்ள புதிய விதியின்படி, ஏர் கண்டிஷனிங் வசதி இல்லாத அடுக்குமாடி குடியிருப்புகள் தங்கள் குடியிருப்பாளர்களுக்குக் குளிர்ச்சியான பொது இடங்களை வழங்க வேண்டும். ஜூன் 1 முதல் செப்டம்பர் 30 வரை இந்த இடங்களின் வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸிற்கு மிகாமல் இருக்க வேண்டும். இது குறித்த தகவல்களை நில உரிமையாளர்கள் குடியிருப்பாளர்களுக்குத் தெரிவிக்க வேண்டும்.
எல்லைகளில் சட்டவிரோத போதைப்பொருட்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில், கூட்டாட்சி அரசாங்கம் ஜூன் 5 முதல் புதிய கட்டுப்பாடுகளை அமல்படுத்துகிறது. இதில் மூன்று குறிப்பிட்ட ரசாயனப் பொருட்கள் மற்றும் செயற்கை அபின் மருந்துகள் பறிமுதல் செய்யப்படும். அதேபோல், ஒன்ராறியோவின் மின்சாரக் கட்டமைப்பைப் பாதுகாக்க ‘பீக் பெர்பார்மன்ஸ்’ என்ற புதிய திட்டம் அறிமுகப்படுத்தப்படுகிறது. கோடை காலத்தில் மின் தேவையைச் சமாளிக்க வணிகக் கட்டிடங்கள் தங்கள் குளிர்சாதனப் பயன்பாட்டைக் குறைத்துக் கொண்டால் அவர்களுக்கு நிதி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
பொருளாதார ரீதியாக, கனடியர்களுக்கு ஒரு நற்செய்தியாக ஜூன் 5 அன்று ஜிஎஸ்டி/எச்எஸ்டி வரிச் சலுகையின் ஒருமுறை கூடுதல் கட்டணம் வழங்கப்படும். இது 2025-26 ஆண்டின் சலுகையில் 50 சதவீதத்திற்குச் சமமாக இருக்கும். ஜூலை மாதம் முதல் இது ‘கனடா மளிகை மற்றும் அத்தியாவசியப் பொருட்கள் பலன்’ என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டு காலாண்டு அடிப்படையில் வழங்கப்படும். இதன் மூலம் ஒரு நால்வர் கொண்ட குடும்பம் ஆண்டுக்கு 1,890 டாலர்கள் வரை பெற வாய்ப்புள்ளது.

