பெங்களூருவை சேர்ந்த தெருவோர காய்கறி வியாபாரி ஒருவர், செயற்கை நுண்ணறிவு தரவு சேகரிப்புக்கான அதிநவீன ஹெட்கியர் கருவியை தலையில் அணிந்து வியாபாரம் செய்யும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. வைபவ் என்ற பயனர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள இந்த வீடியோ, தற்போது 5 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று இணையத்தில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
ஏஐ தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்காக நிறுவனங்கள் நிஜ உலகக் காட்சிகள், ஒலிகள் மற்றும் மனிதர்களின் அன்றாட செயல்பாடுகளைத் தரவுகளாக சேகரிக்கின்றன. இந்த காய்கறி வியாபாரி தனது வழக்கமான பணியை செய்துகொண்டே, ஐபோன் மற்றும் மெமரி கார்டு பொருத்தப்பட்ட இந்தக் கருவியின் மூலம் தரவுகளைச் சேகரித்துத் தருகிறார். இதற்கு அவருக்கு ஒரு மணி நேரத்திற்கு 350 ரூபாய் வழங்கப்படுவதாகவும், இதன் மூலம் அவர் மாதம் 1 லட்சம் ரூபாய்க்கும் மேல் சம்பாதிக்க வாய்ப்புள்ளதாகவும் அந்தப் பதிவில் கூறப்பட்டுள்ளது.
ஆனால், மற்றொரு தரப்பினர் இது ஒரு தற்காலிகத் திட்டம் மட்டுமே என்றும், முழு திட்டத்திற்கும் சேர்த்து அவருக்கு 10 முதல் 20 மணி நேர வேலை மட்டுமே கிடைக்கும் என்பதால், கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு இணையாகச் சம்பாதிக்க முடியாது என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். எப்படியிருப்பினும், தொழில்நுட்ப வளர்ச்சியால் அடித்தட்டு மக்களின் வேலைவாய்ப்பு மற்றும் கிக் பொருளாதாரம் புதிய பரிமாணத்தை எட்டியுள்ளதை இந்தத் சுவாரசிய நிகழ்வு காட்டுகிறது.

