தமிழ் திரையுலகில் மிகக்குறுகிய காலத்தில் தனது படைப்புகள் மூலம் முத்திரை பதித்தவர் இயக்குனர் மாரி செல்வராஜ். பரியேறும் பெருமாள் தொடங்கி, கர்ணன் , மாமன்னன் , வாழை மற்றும் பைசன் என இவர் எடுத்த படங்கள் எல்லாம் ஹிட். தற்போது வாழை 2 ணிகளில் தீவிரமாக இருக்கும் மாரி செல்வராஜ், இப்போது ஒரு புதிய அவதாரத்தை எடுத்துள்ளார். ஆம் மாரி செல்வராஜ் இப்போது ஒரு வெற்றிகரமான இயக்குனராக மட்டுமல்லாமல், திரைப்பட தயாரிப்பாளராகவும் தனது புதிய பயணத்தைத் தொடங்கியுள்ளார்.
மாரி செல்வராஜின் தயாரிப்பில் உருவாகும் முதல் திரைப்படத்தில், இயக்குனர் மற்றும் நடிகரான அமீர் கதாநாயகனாக நடிக்கிறார். லப்பர் பந்து படத்தின் மூலம் தமிழக ரசிகர்களின் மனதைக் கவர்ந்த சுவாசிகா இதில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களின் கூட்டணி ஒரு மாறுபட்ட திரை அனுபவத்தைத் தரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தப் படத்தை மாரி செல்வராஜிடம் உதவி இயக்குனராகப் பணிபுரிந்த அரவிந்த் இயக்குகிறார். இதன் மூலம் தனது உதவியாளரை இயக்குனராக அறிமுகப்படுத்தியுள்ளார் மாரி செல்வராஜ்.
இப்படத்திற்கான ஆரம்பகட்டப் பணிகள் மற்றும் முறைப்படியான பூஜை அண்மையில் எளிமையான முறையில் நடந்து முடிந்தது. இது ஒரு வாழ்வியல் சார்ந்த, அழுத்தமான சமூகப் பின்னணியைக் கொண்ட கதையாக இருக்கும் என்று கூறப்படுகிறது. படத்தின் தலைப்பு மற்றும் இதர தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில தினங்களில் சமூக வலைதளங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

