இந்தியாவையே உலுக்கிய புல்வாமா பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புடைய முக்கிய பயங்கரவாதியான ஹம்சா பர்ஹான், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் சுட்டு கொல்லப்பட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆக்கிரமிப்பு காஷ்மீரின் முசாபராபாத் பகுதியில் இந்த அதிரடி சம்பவம் அரங்கேறியுள்ளது.
முசாபராபாத் நகரில் ஹம்சா பர்ஹான் சென்றுகொண்டிருந்தபோது, அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிகளுடன் திடீரென வழிமறித்துள்ளனர். அவனை குறிவைத்து சரமாரியாக அவர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில், பர்ஹானின் உடலில் பல குண்டுகள் பாய்ந்தன. இதனால் ரத்த வெள்ளத்தில் சரிந்த அவன், சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. புல்வாமா தாக்குதலுக்கான திட்டமிடல் மற்றும் பயங்கரவாத செயல்பாடுகளில் மிக முக்கிய பங்காற்றியவர்களில் இவனும் ஒருவன் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த துப்பாக்கி சூட்டை நடத்திய மர்ம நபர்கள் யார், அவர்கள் எந்த அமைப்பை சேர்ந்தவர்கள் அல்லது இந்த விசித்திர கொலைக்குப் பின்னால் இருக்கும் பின்னணி என்ன என்பது குறித்து பாகிஸ்தான் பாதுகாப்புத்துறை அதிகாரிகளோ அல்லது உள்ளூர் புலனாய்வு அமைப்புகளோ இதுவரை எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பையும் வெளியிடவில்லை.
இந்தியாவால் தேடப்படும் மிக முக்கிய குற்றவாளி அடையாளம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டிருப்பது சர்வதேச பாதுகாப்பு வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

