கனடாவின் மிசிசாகா பகுதியில் கடந்த மே 19 அன்று அரங்கேறிய கத்திக்குத்து கொலை சம்பவம் தொடர்பாக தேடப்பட்டு வரும் சந்தேக நபர் மற்றும் பாதிக்கப்பட்ட நபர் குறித்த விபரங்களை பீல் பிராந்திய காவல்துறை வெளியிட்டுள்ளது. ஆக்னஸ் தெரு மற்றும் ஹுரான்டாரியோ தெரு சந்திப்பில் உள்ள வாகன நிறுத்துமிடத்தில் ஏற்பட்ட மோதலில் 32 வயதான சே வில்சன் என்பவர் படுகாயமடைந்து உயிரிழந்தார்.
இந்தக் கொலை தொடர்பாக 28 வயதான ஜெரோம் எட்வர்ட்ஸ் என்பவரைப் பிடிக்க கனடா தழுவிய வாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் மீது இரண்டாம் நிலை கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. நடுத்தர உடல்வாகு கொண்ட ஜெரோம், கடைசியாகப் பார்க்கப்பட்ட போது ஒளிரும் பச்சை நிற பேண்ட் மற்றும் மஞ்சள் நிற காலணிகளை அணிந்திருந்தார். அவர் ஹுரான்டாரியோ மற்றும் டன்டாஸ் தெரு பகுதிகளில் நடமாட வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
சந்தேக நபர் ஜெரோம் எட்வர்ட்ஸ் ஆயுதம் ஏந்தியிருக்க வாய்ப்புள்ளதால், அவர் மிகவும் அபாயகரமானவர் என்று காவல்துறை எச்சரித்துள்ளது. அவரைப் பற்றிய தகவல் தெரிந்தவர்கள் காவல்துறைக்குத் தகவல் அளிக்குமாறும், அவருக்கு அடைக்கலம் கொடுப்பவர்கள் மீதும் கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

