காகித வடிவிலான இந்திய ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக, விரைவில் பாலிமர் எனப்படும் பிளாஸ்டிக் தாள்கள் புழக்கத்திற்கு வரக்கூடும் என்ற புதிய அதிரடித் திட்டம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கி தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
தற்போதைய காகித பணம் மிக எளிதாக சேதமடைவதால், புதிய நோட்டுகளை தயாரிப்பதற்கான செலவினம் அரசுக்கு ஆண்டுதோறும் பெரும் சுமையாக மாறுகிறது. கடந்த 2025-ஆம் நிதியாண்டில் மட்டும் பணத்தை அச்சிடுவதற்காக மத்திய அரசுக்கு சுமார் ரூ.5,000 கோடி வரை செலவு ஏற்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதற்கு மாற்றாக பிளாஸ்டிக் நோட்டுகளை அறிமுகப்படுத்தும்போது, உற்பத்தி செலவு கணிசமாக குறைவதோடு, அவை நீண்ட காலத்திற்குப் பழுதடையாமல் உழைக்கும் தன்மையை கொண்டிருக்கும். உள்நாட்டில் உள்ள ஏ.டி.எம் இயந்திரங்கள் அனைத்தும் ஏற்கனவே நவீனமயமாக்கப்பட்டுவிட்டதால், புதிய பாலிமர் நோட்டுகளை கையாள்வதில் எவ்வித தொழில்நுட்ப முடக்கமும் ஏற்படாது.
கடந்த 2012-ஆம் ஆண்டிலேயே இதற்கான ஆரம்பக்கட்ட முயற்சிகள் எடுக்கப்பட்டாலும், அப்போதிருந்த தொழில்நுட்ப குறைபாடுகளால் அது தள்ளிப்போனது. ஆனால் தற்போதையச் சூழலில் அத்தகைய தடைகள் அனைத்தும் நீங்கியுள்ளன.
ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா உட்பட உலக அளவில் ஏறத்தாழ 60 தேசங்கள் ஏற்கனவே இந்த பிளாஸ்டிக் பண முறைக்கு மாறிவிட்டன. சர்வதேச நாடுகளின் இந்த வெற்றிகரமான வரிசையில் இந்தியாவும் மிக விரைவில் இணையுமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

