ஆக்சன் கிங் அர்ஜுன் நடிப்பில் கடந்த வாரம் வெளியாகி, தியேட்டர்களில் திருவிழா கோலத்தை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் பிளாஸ்ட். அறிமுக இயக்குநர் சுபாஷ் கே.ராஜ் இயக்கத்தில், பிரபல தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிப்பில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
முன்னணி நட்சத்திரங்களான அபிராமி, பிரீத்தி முகுந்தன், ஜான் கொக்கன், விவேக் பிரசன்னா மற்றும் அர்ஜுன் சிதம்பரம் உள்ளிட்ட பலர் நடிப்பில் மார்ஷியல் ஆர்ட்ஸ் பின்னணியில் உருவான இந்த ஆக்சன் த்ரில்லர் திரைப்படம், பாக்ஸ் ஆபீஸில் நல்ல வசூல் பெற்று வருகிறது.
ஜென்டில்மேன், முதல்வன் என தமிழ் சினிமாவின் பல இமாலய வெற்றிகளைக் கொடுத்த ஆக்சன் கிங் அர்ஜுனுக்கு, கடந்த சில வருடங்களாக சோலோ ஹீரோவாக ஒரு பிரம்மாண்ட வெற்றி அமையாமல் இருந்தது. ஆனால், பிளாஸ்ட் படத்தின் மூலம் கிட்டத்தட்ட 19 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு அசுரத்தனமான வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார்.
படத்தின் ஆரம்பக் காட்சிகள் வழக்கமான ஒரு குடும்பக் கதை போல நகர்ந்தாலும், படம் தொடங்கி சரியாக 20 நிமிடங்களுக்குப் பிறகு கதையில் ஏற்படும் திருப்புமுனை, ரசிகர்களை இருக்கையின் நுனிக்கே கொண்டு வந்து நிறுத்துகிறது. அங்கிருந்து தொடங்கும் ஜெட் வேக திரைக்கதையும், அதிரடியான மார்ஷியல் ஆர்ட்ஸ் சண்டைக் காட்சிகளும் படத்தின் இறுதிவரை தொய்வில்லாமல் பயணிக்கிறது.
குறிப்பாக அர்ஜுனின் மகளாக நடித்திருக்கும் பிரீத்தி முகுந்தனின் மாஸான ஆக்சன் பிளாக்குகளும்,கே.ஜி.எஃப் புகழ் ரவி பஸ்ரூர் அதிரடியான பின்னணி இசையும் படத்திற்கு மிகப்பெரிய பலமாக அமைந்து தியேட்டர்களை அதிரவைத்துள்ளது.
படம் வெளியாகி விமர்சன ரீதியாக மிகப்பெரிய வரவேற்பைப் பெற்ற நிலையில், தற்போது வசூலிலும் விஸ்வரூபம் எடுத்துள்ளது.படம் வெளியாகி 8 நாட்கள் நிறைவடைந்த நிலையில், இந்திய அளவிலும் உலகளவிலும் சேர்த்து இதுவரை ரூ. 41 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.
நடப்பு வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் அட்வான்ஸ் புக்கிங் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதால், இந்த 2 நாட்களில் மட்டும் வசூல் வேட்டை பல மடங்கு அதிகரிக்கும் எனத் தெரிகிறது. அதன்படி, இந்த வார இறுதிக்குள் படம் மிக எளிதாக ரூ. 50 கோடி கிளப்பில் இணையும் என்று திரையரங்கு வட்டாரங்கள் கணித்துள்ளன.

