ஈரான் அணு ஆயுதம் வைத்துக் கொள்ளக் கூடாது எனக் கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் கடந்த பிப்ரவரி மாதம் அந்த நாட்டின் மீது போர் தொடுத்தது. இதன் காரணமாக அமெரிக்காவுக்கு உதவும் வளைகுடா நாடுகளின் மீது ஈரான் தாக்குதலை தொடங்கியது.
அதனால் வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் கப்பல் வழித்தடமான ஹார்மூஸ் நீரிணையை ஈரான் மூடியது. இதை எடுத்து இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கச்சா எண்ணெய் செல்வது தடைபட்டது. இதன் காரணமாக வணிக சிலிண்டர், சமையல் சிலிண்டர், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டது.
தற்போது ஈரானுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டிருக்கிறது. இதன் காரணமாக எரிபொருட்களின் விலை மீண்டும் குறையுமா என்கிற எதிர்பார்ப்பு மக்களிடம் ஏற்பட்டிருக்கிறது.
இந்நிலையில் மத்திய கிழக்கு நாடுகளின் நெருக்கடி காரணமாக விதிக்கப்பட்டிருந்த வணிக சிலிண்டர் மீதான அனைத்து கட்டுப்பாடுகளையும் மத்திய அரசு முழுமையாக நீக்கியிருக்கிறது.
வணிகம் மற்றும் தொழிற்துறை நுகர்வோருக்கான விநியோகம் முற்றிலும் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் அதை 50 சதவீத அளவுக்கு தளர்த்துவதாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. உள்நாட்டு எல்.பி.ஜி உற்பத்தி மற்றும் இறக்குமதி சீராக உள்ளதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது..

