பாகுபலி, பாகுபலி 2, RRR ஆகிய திரைப்படங்கள் மூலம் பேன் இண்டியா அளவில் கவனம் ஈர்த்தவர் இயக்குனர் ராஜமௌலி. இந்த மூன்று படங்களுமே தெலுங்கில் உருவாகி தமிழ், மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி அனைத்து மொழி ரசிகர்களிடமும் வரவேற்பை பெற்று பல நூறு கோடிகளை அள்ளியது.
அதிலும் பாகுபலி 2 திரைப்படம் 1500 கோடி வரை வசூல் செய்ததாக சொல்லப்பட்டது.
தற்போது மகேஷ்பாபு, பிரித்திவிராஜ், பிரியங்கா சோப்ரா உள்ளிட்ட பலரையும் வைத்து வாரணாசி என்கிற திரைப்படத்தை ராஜமவுலி இயக்கி வருகிறார். இந்த திரைப்படம் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
இந்நிலையில் இந்த படம் தொடர்பாக ஊடகம் ஒன்றில் பேசிய ராஜமௌலி ‘வாரணாசி படத்தின் முக்கிய காட்சிகளை எடுத்துவிட்டோம். கதையின் மிக முக்கியமான மற்றும் பிரமாண்டமான அதிரடி சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுவிட்டது. தற்போது காட்சிகளை இணைக்கும் சில சின்ன காட்சிகளை மட்டுமே படமாக்கி வருகிறோம். வருகிற செப்டம்பர் மாத இறுதி அல்லது அக்டோபர் மாத துவக்கத்திற்குள் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து விடும் என நம்புகிறோம்’ எனக் கூறியிருக்கிறார்.

