எபோலா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில், ஆப்பிரிக்க நாடான கொங்கோவிலிருந்து வரும் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கனடா அரசு தற்காலிகத் தடை விதித்துள்ளது. கடந்த 21 நாட்களில் கொங்கோவிற்குச் சென்று வந்த பயணிகள் கனடாவுக்குள் நுழைய திங்கட்கிழமை இரவு 11:59 மணி முதல் ஆகஸ்ட் 29 வரை அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. கனடியக் குடிமக்கள், நிரந்தர வதிவிடவுரிமை பெற்றவர்கள் மற்றும் பழங்குடியினருக்கு இந்தத் தடையிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டாலும், அவர்கள் தாயகம் திரும்பியதும் 21 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு ஆளாக வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வணிக ரீதியிலான மற்றும் தனியார் விமானங்கள் மூலம் இத்தகைய பயணிகளை அழைத்து வர விமான நிறுவனங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கனடாவின் இந்த முடிவு உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்களுக்கு எதிராக அமைந்துள்ளது. பயணத் தடைகள் ஒரு நாடு அல்லது இனத்தின் மீது சமூக அபகீர்த்தியை ஏற்படுத்தும் என்றும், இது தொற்றுநோயைக் கட்டுப்படுத்தும் சர்வதேச முயற்சிகளைப் பாதிக்கும் என்றும் அந்த அமைப்பு எச்சரித்துள்ளது. எபோலா வைரஸ் பரவுவது ஒருவரின் குடியுரிமையையோ அல்லது இனத்தையோ பொறுத்தது அல்ல என்றும், சர்வதேச அளவில் நோய் பரவும் அபாயம் குறைவு என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கொங்கோவில் இதுவரை 2,100-க்கும் மேற்பட்ட எபோலா பாதிப்புகள் பதிவாகியுள்ள நிலையில், 828-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவும் கடந்த வாரம் கொங்கோவிலிருந்து வருபவர்களுக்கு இத்தகைய கட்டுப்பாடுகளை விதித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

