ஈரான் அணு ஆயுதங்கள் உற்பத்தி செய்யக்கூடாது என கூறி அமெரிக்காவும், இஸ்ரேலும் அந்த நாட்டின் மீது தாக்குதலை தொடர்ந்தது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளிலிருந்து கச்சா எண்ணெய் கொண்டு செல்லப்படும் ஹார்முஸ் நீரிணையை ஈரான் மூடியது.
இதன் காரணமாக இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்படவே கேஸ் சிலிண்டர், பெட்ரோல், டீசல் போன்ற எரிபொருட்களின் விலை அதிகரித்தது. இரண்டு மாதங்களுக்கு முன்பு ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் இடையே ஏற்பட்ட பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டு போர் நிறுத்த ஒப்பந்தம் ஏற்பட்டது.
ஆனால் ஹார்மூஸ் நீரிணை வழியாக வரும் மற்ற நாட்டு கப்பல்களை ஈரான் தாக்கியதால் கோபமடைந்த அமெரிக்கா போர் நிறுத்த ஒப்பந்தத்தை ரத்து செய்து விட்டோம்.. ஈரான் மீது தாக்குதல் நடத்துவோம் என கூறியது. ஆனால் இடையில் 20 நாட்கள் ஈரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே எந்த தாக்குதலும் நடைபெறவில்லை. எனவே பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், இது நடக்கவில்லை.
இந்நிலையில், செய்தியாளர்களிடம் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ‘அமைதி ஒப்பந்தத்தை ஏற்க வைப்பதற்காக ஈரான் மீது இதுவரை இல்லாத வகையில் சக்தி வாய்ந்த தாக்குதல்களை நடத்த அமெரிக்கா யோசித்து வருகிறது. ஈரான் மீது கடுமையான தாக்குதல் நடத்துவோம்.. இனி எங்களால் தாங்க முடியாது என்று அவர்கள் கதறும் வரை தாக்குதல் தொடரும்’ என அவர் எச்சரித்திருக்கிறார்.

