ஜமா படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகரும் இயக்குநருமான பாரி இளவழகன், தற்போது தனது இரண்டாவது படமான அன்பே டயானா மூலம் ரசிகர்களை கவர்ந்துள்ளார். இப்படத்தை பாரி இளவழகன் இயக்கி நடித்துள்ள நிலையில், ரம்யா ரங்கநாதன் கதாநாயகியாக நடித்துள்ளார்.
மேலும், ரோஜா, சேத்தன், பரிதாபங்கள் கோபி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். குட் நைட் , டூரிஸ்ட் ஃபேமிலி உள்ளிட்ட வெற்றிப் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டூடியோஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.
பெரம்பூரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த இளைஞனுக்கும் ஆங்கிலோ-இந்திய பெண்ணுக்கும் இடையே உருவாகும் காதலை நகைச்சுவையுடன் சொல்லும் படமாக அன்பே டயானா உருவாகியுள்ளது. வித்தியாசமான கதைக்களம் மற்றும் நகைச்சுவைக் காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. கடந்த ஜூலை 17ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான இப்படம், 25 நாட்களைக் கடந்தும் சில திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு சிறிய பட்ஜெட் படமான அன்பே டயானா பெற்ற வெற்றி பலருக்கும் நம்பிக்கையை கொடுத்துள்ளது.
இந்நிலையில், அன்பே டயானா படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இப்படம் வரும் ஆகஸ்ட் 28ஆம் தேதி பிரபல ஓடிடி தளமான *சோனி லிவ் தளத்தில் ஸ்ட்ரீமிங் செய்யப்பட உள்ளது.
திரையரங்குகளில் ரசிகர்களின் கவனத்தைப் பெற்ற அன்பே டயானா ஓடிடியிலும் நல்ல வரவேற்பைப் பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

