கனடாவின் கியூபெக் மாகாணம் சாடியர்-அப்பலாச்சஸ் பகுதியைச் சேர்ந்த அலெக்சாண்டர் பாடைன் என்ற 30 வயது இளைஞர், லாட்டரி போட்டியில் 5 மில்லியன் டாலர் மதிப்பிலான மெகா ஜாக்பாட் பரிசை வென்றுள்ளார். தனது வேலை வாரத்தின் இறுதியில் ஒரு சில லாட்டரி சீட்டுகளை வாங்குவதை அவர் வழக்கமாக வைத்திருந்தார். அந்த வகையில், செயிண்ட்-மேரி நகரில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் அவர் ‘$5 மில்லியன் எக்ஸ்ட்ரீம்’ என்ற லாட்டரி சீட்டை வாங்கினார். கடையின் முன்பே அந்தச் சீட்டைத் தேய்த்துப் பார்த்தபோது, அதில் உள்ள இறுதி விளையாட்டில் 37 என்ற எண் அவருக்கு 5 மில்லியன் டாலர் ஜாக்பாட் பரிசை உறுதிப்படுத்தியது.
இதைக் கண்டு திகைத்துப் போன அவர், உடனடியாக அங்கிருந்த இயந்திரத்தில் சீட்டைச் சரிபார்த்தார். பரிசு உறுதியானபோது இயந்திரம் எழுப்பிய சத்தம் இனிமையாக இருந்ததாக அவர் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார். வெற்றிச் செய்தியைத் தனது குடும்பத்தினரிடம் பகிர்ந்த அலெக்சாண்டர், தற்போது தனக்குக் கிடைத்துள்ள இந்தப் பெரும் தொகையைக் கொண்டு தனது குடும்பத்தினரை மகிழ்ச்சிப்படுத்தத் திட்டமிட்டுள்ளார். எனினும், இவ்வளவு பெரிய தொகை கிடைத்த பிறகும் தனது பணியிலிருந்து விலகும் எண்ணம் தனக்கு இல்லை என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார். லாட்டரி சீட்டை விற்பனை செய்த கடைக்கு 1 சதவீத கமிஷன் தொகையான 50,000 டாலர் வழங்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

