கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்தை தனி நாடாக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வரும் நிலையில், இது தொடர்பான முக்கிய வாக்கெடுப்பு வரும் அக்டோபர் 19-ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆல்பர்ட்டா மாகாண மக்கள் கனடாவுடன் தொடர்ந்து இணைந்திருப்பதா அல்லது பிரிவதா என்பது குறித்த முதற்கட்ட முடிவை இந்த வாக்கெடுப்பின் மூலம் அறிவிக்க உள்ளனர். இந்த வாக்கெடுப்பானது மாகாணம் உடனடியாகப் பிரிவதைக் குறித்த நேரடி வாக்கெடுப்பு கிடையாது. மாறாக, ஆல்பர்ட்டா பிரிவது தொடர்பாக ஒரு அதிகாரப்பூர்வ பொது வாக்கெடுப்பை நடத்த வேண்டுமா என்ற அடிப்படையிலேயே மக்கள் தங்கள் வாக்குகளைப் பதிவு செய்ய உள்ளனர்.
இந்தச் சூழலில், பிரிவினைக்கு ஆதரவான அமைப்புகள் 214 பக்கங்கள் கொண்ட விரிவான அறிக்கையை வெளியிட்டுள்ளன. அந்த அறிக்கையில், ஆல்பர்ட்டா தனி நாடாக மாறும் பட்சத்தில் மக்களின் வாழ்க்கை முறை எவ்வாறு அமையும் என்பது விவரிக்கப்பட்டுள்ளது. ராணுவம், போக்குவரத்து, பொதுக் கடன், மின்சாரம், எரிபொருள், மற்றும் ஓய்வூதியம் போன்ற முக்கிய அம்சங்கள் குறித்து கனடா அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியிருக்கும் என்று ஆதரவாளர்கள் தெரிவிக்கின்றனர். இருப்பினும், பிரிவினைக்கு எதிர்ப்புத் தெரிவிப்பவர்கள், ஒருமுறை பிரிந்து சென்றால் இத்தகைய உடன்பாடுகள் மற்றும் பேச்சுவார்த்தைகள் சாத்தியமற்றது என்று வாதிடுகின்றனர். ஆல்பர்ட்டாவின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் இந்த முக்கிய வாக்கெடுப்பின் முடிவுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.

