இப்போதெல்லாம் பொங்கல் வந்தாலே ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசு என்ன கொடுக்கிறார்கள் என்பதைவிட எவ்வளவு காசு கொடுக்கப் போகிறார்கள் என்பதுதான் மக்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது. 2021ம் வருடம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசாக அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி 2500 ரூபாய் கொடுத்தார்.
அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த திமுக 2022, 2023, 2024 ஆகிய ஆண்டுகளில் பொங்கல் பரிசாக 1000 ரூபாய் கொடுத்தது. தற்போது 2026 சட்டமன்ற தேர்தல் வருவதால் இந்த பொங்கலுக்கு திமுக அரசு 3 ஆயிரம் ரூபாய் கொடுக்கப் போகிறார்கள் என பலராலும் சொல்லப்பட்டு வருகிறது.
ஆனால் இப்போது வரை அரசு அறிவிக்கவில்லை. இந்நிலையில்தான் 2026 பொங்கல் பரிசு தொகுப்புக்கு 248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசின் நேற்று அரசாணை வெளியிட்டது. பச்சரிசி ஒரு கிலோ, சர்க்கரை ஒரு கிலோ, முழு கரும்பு ஆகியவை கொடுக்கப்பட இருக்கிறது. ஏனெனில் பொங்கல் பரிசுக்கு 248 கோடிதான் ஒதுக்கீடு எனில் பச்சரிசியும், சக்கரையும், கரும்பும் மட்டும்தான் கொடுக்கப் போகிறார்களா? பொங்கல் பரிசாக பணம் ஏதும் கொடுக்கப்பட போவதில்லையா? என்கிற சந்தேகம் பலருக்கும் எழுந்தது.
ஆனால் இந்த 248 கோடி ரூபாய் பொங்கல் தொகுப்புக்கு மட்டுமே.. அதை முன்பே கொடுத்துதான் பொருள் வாங்க முடியும். இதற்கும் பரிசு தொகைக்கும் சம்பந்தமில்லை. 2 ஆயிரம் கொடுக்கலாமா அல்லது 3 ஆயிரம் கொடுக்கலமா என முதல்வர் நிதி அமைச்சரிடம் ஆலோசனை செய்து வருகிறார். அதன்பின் அதற்கு நிதி ஒதுக்கப்படும். இன்றோ அல்லது நாளையோ இது தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிடுவார்’ என திமுகவினர் சொல்கிறார்கள்.

