2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவும், அதிமுகவும் தங்களின் கூட்டணிகளை வலுப்படுத்தும் வேலைகளில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. அதிமுகவை பொறுத்தவரை அந்த கூட்டணி 90 சதவீதம் முடிந்து செய்துவிட்டது. அதிமுக முயற்சி செய்து அந்த கூட்டணிக்கு வராத ஒரே கட்சி தேமுதிக மட்டுமே. ஏனெனில் தாங்கள் கேட்டதை அதிமுக கொடுக்காததால் தேமுதிக தற்போது திமுகவிடவும் பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. குறைந்தது 10 தொகுதிகள், ஒரு ராஜ்ய சபா சீட் என்பது பிரேமலதாவின் கோரிக்கையாக இருக்கிறது. ஆனால் அதை திமுக ஏற்க மறுக்கிறது.. இதுதான் பிரச்சனை..
ஒருபக்கம் கடந்த பல தேர்தல்களாகவே திமுகவுடன் கூட்டணி அமைத்த காங்கிரஸ் இதுவரை திமுகவுடன் கூட்டணி பேச்சு வார்த்தையை துவங்கவே இல்லை. ஏனெனில், இந்த முறை காங்கிரஸின் கோரிக்கை பெரிதாக இருக்கிறது. அதிக தொகுதிகள், ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கு, உள்ளாட்சித் தேர்தலில் 20 சதவீத தொகுதிகள் என பல கோரிக்கைகளை காங்கிரஸ் முன்வைக்கிறது. ஆனால் திமுக தலைமை இதை ஏற்கவில்லை..
ஒருபக்கம் விஜயின் தவெக காங்கிரஸை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியிருக்கிறது. காங்கிரஸிடம் பேசிய தவெக தரப்பு ‘எங்களிடம் 75 லட்சம் உறுப்பினர்கள் இருக்கிறார்கள்.. அவர்கள் மட்டுமல்லாமல் அவர்கள் மேலும் ஒருவரை ஓட்டு போட கூட்டி வந்தாலே ஒன்றரை கோடி வாக்குகள் சுலபமாக வந்துவிடும்..
போன தேர்தலில் திமுகவுக்கும், அதிமுகவுக்கும் வித்தியாசம் வெறும் 20 லட்சம் வாக்குகள்தான். எனவே எங்களோடு நீங்கள் கூட்டணி அமைத்தால் நாம் ஆட்சி அமைக்க முடியும் என காங்கிரஸுக்கு வலை விரித்திருக்கிறதாம். சமீபத்தில் கூட ஊடகம் ஒன்றில் பேசிய காங்கிரஸ் தேர்தல் வியூக வகுப்பாளர் பிரவீன் சக்கரவர்த்தி ‘தவெக யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்து நின்றாலே 18 சதவீத வாக்குகளை வாங்கும்’ என்று பேசியிருந்தார்.
இதையெல்லாம் பார்க்கும் போது காங்கிரஸ் தவெக பக்கம் போனாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்கிறார்கள் விபரம் இருந்தவர்கள். காங்கிரஸின் முடிவு தெரியாததால்தான் இதுவரை கூட்டணி பற்றி பேசுவதற்கு திமுக தரப்பில் குழு அமைக்கப்படவில்லை என்கிறார்கள்.. காங்கிரஸ் இதுவரை தன்னுடைய முடிவை சொல்லாமல் இருப்பது ஸ்டாலினை அப்செட் ஆக்கியிருப்பதாக சொல்லப்படுகிறது.

