பிப்ரவரி இறுதியில் அமெரிக்க-இஸ்ரேல் வான்வழி தாக்குதல்கள் தொடங்கியதிலிருந்து, ஈரானில் இணைய சேவை முற்றிலும் முடக்கப்பட்டுள்ளது. நாட்டின் 99 சதவீத மக்கள் இணைய வசதியின்றி தவிப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
போர்ச்சூழலில் பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஈரான் அரசு வாதிட்டாலும், மக்கள் போராட்டங்களை ஒடுக்கவும், உண்மைகளை மறைக்கவும் இந்த ‘டிஜிட்டல் முற்றுகை’ பயன்படுத்தப்படுவதாக மனித உரிமை அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.
இதனால் ஈரான் மக்கள் தங்களின் உறவினர்களை தொடர்பு கொள்ள முடியாமலும், அவசர தகவல்களை பெற முடியாமலும் தவிக்கின்றனர். ஸ்டார்லிங்க் போன்ற செயற்கைக்கோள் இணைய வசதிகளை பயன்படுத்துவோர் மீது அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது.
வெளி உலக தொடர்பின்றி ஈரான் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதால், அங்குள்ள நிலவரம் குறித்த நம்பகமான தகவல்கள் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. “ஈரான் மக்கள் வெளியில் ஒரு போரையும், உள்ளே தகவல்களை பெற முடியாமல் அதிகார வர்க்கத்துடன் மற்றொரு போரையும் எதிர்கொள்கின்றனர்” என்று சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவிக்கின்றனர். இந்த இருண்ட சூழல் ஈரானியர்களின் அன்றாட வாழ்வை முடக்கியுள்ளது.

