தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 108 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆச்சரியப்படுத்தியிருக்கிறது. அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதல்வராக பதவியேற்கவுள்ளார். ஆட்சி அமைக்க அழைக்கும்படி விஜய் தமிழக ஆளுநருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அநேமாக நாளை விஜய் ஆளுநரை சந்திக்க வாய்ப்பிருக்கிறது. அப்போது விஜய்க்கு ஆளுநர் இரண்டு வாய்ப்புகளை கொடுப்பார்.
ஒன்று சட்டசபையில் விஜய் தனது பெரும்பான்மையை நிரூபிக்க வேண்டும் அல்லது ஆட்சி அமைக்க தேவையான ஆதரவை கொடுக்கும் கட்சிகளின் எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதத்தை விஜய் ஆளுநரிடம் கொடுக்க வேண்டும். இந்த இரண்டில் எது நடந்தாலும் தவெக ஆட்சி அமைப்பது உறுதியாகிவிடும். ஆனால், அதில்தான் சிக்கல் இருக்கிறது.
ஏனெனில் ‘விஜய்க்கு யார் ஆதரவு கொடுக்கப் போகிறார்?’ என்பது முக்கியமான கேள்வியாக இருக்கிறது. காங்கிரஸ், பாமக, விடுதலை சிறுத்தை, கம்யூனிஸ்ட், அமமுக போன்ற கட்சிகளின் ஆதரவுடன் விஜய் ஆட்சி அமைக்க முடியும். ஆனால் அவர்கள் ஆதரவு கொடுப்பார்களா என்பதுதான் கேள்வி.. தற்போது நிலவரப்படி விஜய்க்கு 12 எம்எல்ஏக்கள் தேவைப்படுகிறார்கள். ஆனால் அதைவிட அதிகமாக மூன்று எம்எல்ஏக்கள் சேர்த்து விஜய் 15 எம்.எல்.ஏக்களின் ஆதரவை கூடுதலாக பெறுவதுதான் நல்லது என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள். அல்லது ஒரே கட்சியான அதிமுகவிடமிருந்து 15 எம்எல்ஏக்களின் ஆதரவை பெற்று விஜய் ஆட்சி அமைப்பது நீண்ட கால பலனை தரும் எனவும் அவர்கள் சொல்கிறார்கள்.
ஒருவேளை விஜய்க்கு தேவையான ஆதரவு எம்எல்ஏக்கள் கிடைக்காவிட்டால் ஆட்சி அமைக்க முடியாது. இதையடுத்து தவெகவுக்கு அடுத்து அதிகமான தொகுதியில் வெற்றி பெற்ற திமுகவை ஆட்சியமைக்க் ஆளுநர் அழைப்பார். அவர்களாலும் முடியாமல் போனால் அடுத்த ஆறு மாதங்கள் தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி நடைபெறும். அதன்பின் மீண்டும் 234 தொகுதிகளுக்கும் தேர்தல் நடத்தப்படும்.

