அமெரிக்கா ஈரான் இடையே நடந்த போரில் இரு நாடுகளும் மாறி மாறி தாக்கிக் கொண்டன. இந்த போர் தற்போது தற்காலிகமாக முடிவுக்கு வந்துள்ள நிலையில், போரினால் ஏற்பட்ட பாதிப்புகள் மற்றும் செலவுகள் குறித்த தகவல்கள் வெளியாகி அதிர வைக்கிறது. டிரம்ப் நிர்வாகம் மதிப்பிட்டதை விட பாதிப்புகள் மிக மோசமாக இருப்பதாக அமெரிக்க ஊடகங்கள் கூறியுள்ளது.
வளைகுடா போரில் ஈரான் தாக்குதல்கள் அமெரிக்காவின் ராணுவ பலத்தையே அசைத்துப் பார்த்துள்ளது. ஈரான் நடத்திய தொடர் தாக்குதல்களில் அமெரிக்க ராணுவத்திற்கு மிக மோசமான சேதம் ஏற்பட்டுள்ளதாம். அதாவது ட்ரம்ப் நிர்வாகம் வெளியிட்ட தகவல்களை விட, அமெரிக்க ராணுவத் தளங்களுக்குப் பல மடங்கு அதிகச் சேதம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்காவில் வெளியாகும் வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.
தொழில்நுட்பத்தில் சிறந்த நாடாகக் கருதப்படும் அமெரிக்காவுக்கு, ஈரானின் இந்தத் துல்லியமான பதிலடி ஒரு மிக பெரிய ஷாக் கொடுத்துள்ளது. அதாவது 15 அமெரிக்க ராணுவத் தளங்களில் உள்ள சுமார் 228 கட்டிடங்கள் மற்றும் தளவாடங்கள் ஈரானால் தாக்கப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
பஹ்ரைன்: அமெரிக்காவின் 5-வது கடற்படைத் தலைமையகம் (ஆங்கிலத்தில் 5th Fleet HQ) கடுமையான சேதத்தைச் சந்தித்துள்ளது. இதன் சீரமைப்புப் பணிகளுக்கு மட்டுமே 200 மில்லியன் டாலர் தேவைப்படலாம்.
குவைத்: அலி அல்-சலேம், கேம்ப் அரிஃப்ஜான் மற்றும் கேம்ப் புயரிங் ஆகிய தளங்களில் இருந்த விலை உயர்ந்த பேட்ரியாட் ஏவுகணைத் தடுப்பு அமைப்புகள் மற்றும் எரிபொருள் கிடங்குகள் அழிக்கப்பட்டுள்ளன.
சவுதி அரேபியா: பிரின்ஸ் சுல்தான் விமானத் தளத்தில் இருந்த E-3 சென்ட்ரி கட்டளை விமானம் மற்றும் ஒரு எரிபொருள் டேங்கர் விமானம் அழிக்கப்பட்டுள்ளன.
கத்தார் & ஜோர்டான்: அல்-உடைத் தளத்தில் இருந்த செயற்கைக்கோள் தகவல் தொடர்பு மையங்கள் மற்றும் ஜோர்டானில் இருந்த THAAD ரேடார் அமைப்புகள் செயலிழக்கச் செய்யப்பட்டுள்ளன.

