உலகளாவிய எரிசக்தி சந்தையில் நிலவி வரும் பதற்றமான சூழல்களுக்கு மத்தியில், இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் உயர்த்தியுள்ளன.
கடந்த ஐந்து நாட்களில் மட்டும் எரிபொருள் விலை இரண்டாவது முறையாக அதிகரிக்கப்பட்டுள்ளது வாகன ஓட்டிகளிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி, பெட்ரோல் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு சராசரியாக 90 பைசா வரை உயர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையே ஏற்பட்டுள்ள மேற்காசிய போர் சூழலால் உலகளாவிய கச்சா எண்ணெய் விநியோகம் கடுமையாக முடங்கியுள்ளது. குறிப்பாக, முக்கிய வர்த்தக பாதையான ஹார்முஸ் ஜலசந்தியில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து பாதிப்பால், ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 110 டாலர் வரை உயர்ந்துள்ளது.
மேலும், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதும் இந்த இறக்குமதி செலவை பன்மடங்கு அதிகரித்துள்ளது. இந்த அதிரடி மாற்றத்தால், சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ.104.49 ஆகவும், டீசல் விலை ரூ.96.11 ஆகவும் உயர்ந்து விற்பனையாகிறது.
கடந்த நான்கு ஆண்டுகளாக மாற்றமில்லாமல் இருந்த எரிபொருள் விலை, தற்போது ஒரே வாரத்தில் இரண்டு முறை உயர்ந்துள்ளதால் அத்தியாவசிய பொருட்களின் விலையும் உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

