தமிழக முதல்வர் விஜய் மூன்று நாள் அரசு பயணமாக நேற்று முன் தினம் காலை 10 மணி அளவில் டெல்லி சென்றார். அங்கு சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரதமர் மோடி, ஜனாதிபதி உள்ளிட்ட பல அரசியல் தலைவர்களையும் சந்தித்தார். மேலும் நேற்று காலை பிரதமர் மோடி தலைமையில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்திலும் கலந்து கொண்டு தமிழகத்திற்கு தேவையான நிதிகள் பற்றியும் அவர் பேசியிருந்தார். இந்நிலையில்தான், உதயநிதி எம்.எல்.ஏ தனது எக்ஸ் தளத்தில் கீழ்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.
தேர்தல் பிரச்சாரத்தின் போது, தமிழ்நாடு ஏதோ படுகுழிக்குள் விழுந்தது போலவும், கடனில் தத்தளிப்பதாகவும் பொய்யான செய்திகளை பரப்பிய இன்றைய முதலமைச்சர், டெல்லியில் நடந்த நிதி ஆயோக் கூட்டத்தில், தமிழ்நாட்டின் சாதனைகள் என்று பெரும் பட்டியலை வாசித்துள்ளார்.
இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதாரமாக தமிழ்நாடு இருக்கிறது. இந்தியாவில் பணிக்குச் செல்லும் பெண்களில் 42 சதவீத மகளிர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். பெண் கல்வி, பாதுகாப்பு, சுகாதாரம் போன்றவற்றில் முன்னேற்றம், மகளிர் சுய உதவி குழுக்களின் வளர்ச்சி என்று முதலமைச்சர் பேசியிருக்கிறார். இவையெல்லாம் அவருடைய ஒரு மாத கால தவெக ஆட்சியில் நடந்த சாதனைகளா? அல்லது, 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியின் சாதனைகளா? என்பதை முதலமைச்சர் விளக்க வேண்டும்.
தேர்தலுக்கு முன்பு ‘நீட் மட்டும் தான் உலகமா?’ என்று கேட்டவர், இப்போது நீட் விலக்கு கேட்டு, அவர் பேசியதற்கு அவரே மறுப்பு கூறியிருக்கிறார். டெல்லி வரை சென்றவர், நிதி ஆயோக் கூட்டத்திலோ, அல்லது கர்நாடகாவில் ஆட்சி செய்யும் அவருடைய புதிய கூட்டணிக்கட்சியிடமோ மேகதாது பிரச்சினை பற்றி வாய் திறக்காமல் நமக்கெதுக்கு வம்பு என்று அமைதியாக திரும்பியிருக்கிறார்.
மொத்தத்தில், நிதி ஆயோக் கூட்டத்தில் நம் கழக அரசின் சாதனைகளின் மீது முழுக்க முழுக்க ஸ்டிக்கர் ஒட்டியிருக்கிறது சோபா மாடல் அரசு.. பொய்களையும், அவதூறுகளையும் அள்ளி வீசி, மக்களை ஏமாற்றி, நீங்கள் பெற்றிருக்கும் போலி வெற்றி நீண்ட நாள் நிலைக்காது CM Sir. உண்மை நிச்சயம் வெல்லும்’ என பதிவிட்டிருக்கிறார்.

